பி.டி. கத்தரியே போ...போ....

Friday, January 22, 2010




கத்தரி செடியெல்லாம் காய்களாய் காய்த்து தொங்கும், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்ற கவர்ச்சி வாசகங்களுடன் பாமர விவசாயிகளுக்கு மாயவலை விரித்து வருகிறது பி.டி. கத்தரிக்காயை (மரபணு மாற்ற கத்தரிக்காய்) அறிமுகம் செய்யும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம்.

சமீபகாலமாக புதிய வகை பூச்சி கள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக் காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளிக்கப்படுகின்றன. அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துகிறோம் என்ற சப்பைகட்டு வாதங்கள் வேறு.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்தி­ருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி! அதாவது பல்வ­லி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!. இதற்கு ஜால்ரா போடுகின்றன இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள்.

இந்தியாவின் 5 வேளாண் பல்கலைக்கழகங்களில் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்பட) பி.டி. கத்தரி ஆய்வுப்பணிகள் முடிவுற்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளின் நாயகன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சர்ச்ச்சைகளின் நாயகன் ஜெய்ராம் ரமேஷுன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் தான் இக்குழுமம் இயங்கி வருகிறது.

தில்லி, கோல்கத்தா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுப்பின.

கத்தரியை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு. அதை விற்கும் செய்யும் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு. உண்ணும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு. ஆனால், பி.டி. கத்தரியை அறிமுகம் செய்தே தீருவோம் என அடம்பிடித்து வருகிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு வால்பிடிக்கின்றனர் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், மாநில வேளாண் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்.

பி.டி. கத்தரிக்கு அமைச்சர்களே வால்பிடிப்பது ஏன்?. மத்தியில் பிரதான எதிர்கட்சியான பாஜகவும், மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல நடித்து மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதன் ரகசியம் என்ன?.
பி.டி. கத்தரியின் உரிமையாளரான மான்சான்டோ நிறுவனம் கொட்டும் பண மழை தான்.

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா­னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எ­லிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரல் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று இ.ப. விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இங்லாந்து, பிரான்ஸ், இத்தா­லி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்ற விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான். ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

இத்தனை நாடுகளும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகள் பணத்துக்காக பல்லக்கு தூக்குவது வெட்கக்கேடான செயல். பணமழையில் நனைய வேண்டும் என ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்(அலைக்கற்றை), முத்திரைத்தாள் ஊழல், போபர்ஸ் ஊழல் என இன்னும் புதுப்புது ஊழல்கள்.
உணவை விஷமாக்கும் பி.டி. கத்தரியில் மட்டும் காசுபார்க்க வேண்டாம். தயவுசெய்து பி.டி. கத்தரிக்கு தடைபோடுங்கள் மாண்புமிகு அரசியல்கோமாளிகளே....

பெரியாரின் பேரனே இது நியாயமா?

Wednesday, January 20, 2010




எதிர்கட்சியினரே அமைதியாக இருந்தபோது கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருக்கும் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதியை அடிக்கடி சீண்டுவதும். பின்னர் அவரிடமே சரண்டர் ஆவதும் வழக்கம். மேளதாளம் வாசிப்பவர் என கலைஞரை விமர்சனம் செய்துவிட்டு, இளங்கோவன் பட்டபாடு படாதபாடு.

மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஈரோட்டில், அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இளங்கோவன் கொஞ்ச நாளாக முகவரி இல்லாமல் இருந்து வந்தார். பத்திரிகைகளில் பரபரப்பு பேட்டியோ, நக்கல், நையாண்டி தனமான பேச்சோ இல்லை.

இளங்கோவன் எங்கே இருக்கிறார் என பத்திரிகையாளர்களே தேடிவந்த நிலையில், ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுகிறார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டியதில்லை. இன்னமும் அவரது செயல்கள் பாராட்டத்தக்கவகையில் உள்ளன என மகுடிவாசித்திருக்கிறார்.

இதே மகுடியை ஒரு மாதத்துக்கு முன்பு வாசித்திருந்தால் கூட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கணக்கடங்கா குழுக்களில் ஏதாவது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கலாம். பாவம் காலம் கடந்த யோசனை தான்.

கொஞ்சம் பொறுத்திருங்கள் இளங்கோவன் அவர்களே!. உங்களை போல கலைஞரின் ஞாபகத்துக்கு வந்த அடிவருடிகள் மட்டும் தான் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இன்னமும் சிலர் கலைஞரின் ஞாபகத்துக்கு வரவாய்ப்பு உண்டு அல்லது வரவைக்கப்படவும் வாய்ப்புண்டு. அப்போதாவது உங்களது பெயரும் அக் குழுக்களில் இடம்பெற்றுவிடும்.

எதையும் தைரியமாக, ஆணித்தரமாக, பாமரனுக்கும் புரியம் மொழியில் எளிமையாக பேசி மக்களிடம் விழிப்புணர்வையும், புரட்சியையும் ஏற்படுத்தியவர் பெரியார். தாத்தாவின் பிறகுணங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும், தைரியமான பேச்சு மட்டும் உங்களிடம் இருக்குது என பெரியாரின் பேரன்கள் (தமிழர்கள்) பெருமைபட்டது உண்டு.

மனதில்படும் எதையும் பளிச்சென்றுகூறி வந்த நீங்கள், கருணாநிதிக்கு அடிவருடியாக மாறியதன் ரகசியம் என்ன?. கலைஞரின் சிறப்பாக செயல்படுகிறார்? என திமுக தொண்டன் கூறலாம். அதற்குகூட காரணம் உண்டு. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் கூட திமுக வெற்றி பெற முடியும் என்ற அளவுக்கு தனது சொந்த கட்சியை பலப்படுத்திவிட்டார்.

திமுக தொண்டன் கூற வேண்டிய கூற்றை, பெரியாரின் பேரன் கூறலாமா?. காங்கிரஸ் தொண்டன் என்பதை சற்று மறந்துவிட்டு, நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா? பெரியார் பேரன் மகுடிவாசிக்கலாமா?.

சரி பெரியாரின் பேரனாக உங்களால் கருத்துதெரிவிக்க முடியாது. காரணம் ஊரறிந்த விஷயம். அதை நாங்களும் விட்டுவிடுகிறோம். காங்கிரஸ் தொண்டனாக கூறுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?.

10 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் சுமார் 12 ஆயிரம் துவக்கப்பள்ளிகளை துவக்கி கிராமங்களில் கல்வி்த் தீபத்தை ஏற்றினார். மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி பெல் தொழிற்சாலை, ஆவடி கனரக இயந்திரங்கள் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, சேலம் இருக்கு உருக்காலை, தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை என தமிழகத்தில் தொழில்புரட்சி செய்தார்.

பேச்சிப்பாறை, பெருஞ்சானி அணைகள், பாபநாசம் அணை, பவானிசாகர் அணை, இன்னமும் சில அணைகள் என தமிழகத்தின் நீர்வளத்தை பெருக்கினார். தனது தாய், சகோதரி, குடும்பம் என எதையும் பற்றி யோசிக்காமல், தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் உழைத்தார்.

கலைஞரின் சாதனை என்ன?. மகன அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, இன்னொரு மகன் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, மகள் கனிமொழிக்கு மக்களவை உறுப்பினர் பதவி, பேரன் தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி, மற்றொரு பேரன் கலாநிதிமாறனுக்கு சன் டிவி குழுமம் (சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா டிவி, கே.டிவி, சன் மியூசிக், உதயா,.....), தனக்கு கலைஞர் டிவி.

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு. தமிழர்களை நிரந்தரமாக முன்னேற்ற, பொருளாதாரத்தை வலுப்படுத்த தொலைநோக்காக என்ன செய்தார் கலைஞர்?.



இளங்கோவன் அவர்களே எப்போதும் ஒரே மாதிரி பேசுங்கள். அடிக்கடி நிறம் மாறினால் வேறுபெயர் (பச்சோந்தி) கூறி அழைத்துவிடுவார்கள்

காங்கிரஸ் தொண்டனாக, காமராஜரின் விசுவாசியாக இப்போது கூறுங்கள் இளங்கோவன் அவர்களே!. கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?. தப்பி, தடுமாறி பெரியாரின் குடும்பத்தில் பிறந்துவிட்டதால், பெரியாரின் பேரன் என்ற பெருமைமிகுந்த பெயரை காப்பாற்ற சற்று வீரமாக பேசுங்கள். இல்லை முதுகெலும்பு இல்லையென்றால் அமைதியாக இருங்கள்.

பெரியாரின் தோரணையில் சொல்வதென்றால்...ஈர வெங்காயம் இளங்கோவன் அவர்களே கொஞ்சநாள் வாயை பொத்திகிட்டு இருங்க......

தோழர் ஜோதிபாசுவுக்கு சிவப்பு வணக்கம்

Sunday, January 17, 2010




இந்தியாவின் முதுபெரும் பொதுவுடமை தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு (96) கோல்கத்தா சால்ட்லேக்கில் உள்ள ஆம்ரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (17-01.2010)-ல் இறந்தார்.

இந்தியாவின் சிறந்த பொதுவுடமைவாதி, பொதுவுடமை தத்துவத்தை ஆட்சியில் செயல்படுத்தி வெற்றி கண்டவர், பிரதமராகும் வாய்ப்பை (இந்தியாவின் முதல் பொதுவுடமை பிரதமர் ஆகும் வாய்ப்பை) பொதுவுடமைவாதிகளால் இழந்தவர் என அடுக்கடுக்கான வார்த்தைகளால் தோழர் ஜோதிபாசுவை பற்றி குறிப்பிட முடியும்.

உலக வரலாற்றில் தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு நீண்ட காலம் ஆட்சியில் இருந்த முதல் பொதுவுடமை தலைவர் என்ற முத்திரையை பதித்தவர்.
மேற்குவங்கத்தில் 1977 முதல் 2000-ம் ஆண்டு வரை 5 முறை முதலமைச்சராக இருந்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நீண்டகாலம் (23 ஆண்டுகள்) முதலமைச்சர் பதவியை வகித்த பெருமைக்குரியவர்.


1996ஆம் ஆண்டு மைய அரசில் ஐக்கிய முன்னணியின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்க அனைவரின் ஒப்புமையைப் பெற்றபோதிலும் தம் கட்சியின் பொலிட்பீரோ விருப்பத்திற்கிணங்க அரசு அமைப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை வரலாற்றுப்பிழையாக பின்னர் பாசு குறிப்பிட்டார்.

ஆட்சிக் கட்டில் கிடைத்தால் போதும் சுடுகாடு போகும் வரை கட்டிலில் இருந்து இறங்கமாட்டேன் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. ஆனால், 2000-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி வெற்றிப் பெறக்கூடிய நிலையில் இருந்தும்கூட தனது உடல்நலத்தை காரணம் காட்டி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் ஜோதிபாசு.

முதலமைச்சர் பதவியில் இருந்து ஜோதிபாசு ஒதுங்கியபின் பொதுவுடமை கட்சிக்கும் பின்னடைவு தான். 2004 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்றபோதும், பல்வேறு சிங்குர், மாவோயிஸ்ட் போராட்டம் என பல்வேறு சர்ச்சைகள் சிக்கிக்கொண்டன. 2009 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சிக்கு பெருத்த பின்னடைவு.

பொதுவுடமை கட்சி கோலோச்சிய அதே களத்தி்ல் (மேற்கு வங்கத்தில்), அக் கட்சியின் வீழ்ச்சியையும் காணக்கூடிய துர்பாக்கிய நிலை ஜோதிபாசுக்கு ஏற்பட்டது கொடுமையிலும், கொடுமை. ஜோதிபாசு உயிருடன் இருக்கும்போதே மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படவில்லை என்பது தோழர்களின் மனதுக்கு சற்று ஆறுதலான விஷயம்.


ஜோதிபாசுவின் இளமை பருவம்


மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் ஓர் நடுத்தர குடும்பத்தில் 8-7-1914-ல் ஜோதிபாசு பிறந்தார். அவருக்கு ஜோதிரிந்தர பாசு என அவரது பெற்றோர் பெயரிட்டனர். அவரது தந்தை நிஷிகாந்த பாசு (தற்போது பங்களாதேசத்தில்) உள்ள கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்கா மாவட்டத்தில் பரோடி கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் ஹேமலதா பாசு இல்லத்தரசியாக இருந்தார்.

பள்ளிக்கல்வியை 1920 ஆம் ஆண்டு கோல்கத்தா தர்மதாலாவிலுள்ள லோரேட்டோ பள்ளியில் துவக்கினார். .பள்ளியில் சேர்க்கும்போதுதான் அவரது தந்தை அவர் பெயரை ஜோதிபாசு என மாற்றினார். 1925ஆம் ஆண்டு புனித சேவியர் பள்ளிக்கு மாறினார் ஜோதிபாசு. 1935-ம் ஆண்டில் இந்து கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார்.


பொதுவுடமை கட்சியில் நெருக்கம்

அடுத்து சட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு பிரித்தானிய பொதுவுடமைக் கட்சி மூலம் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டார். 1940ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக மிடில் டெம்பிள் சட்டரங்கில் பதிந்து கொண்டார். அந்த ஆண்டே இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தொடருந்து தொழிலாளர் சங்க பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் தமது சட்டப்படிப்பின்போதே சமூக அமைப்புகளிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட பாசு இந்தியா திரும்பியதும் இடதுசாரி அரசியலில் பங்கெடுக்கும் தமது எண்ணத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.அவர்களது பலத்த எதிர்ப்புகளுக்கிடையேயும் பிரித்தானிய இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போதிலும் தமது குறிக்கோளிடமிருந்து மாறவில்லை.

அரசியல் வாழ்க்கை

1946ஆம் ஆண்டு வங்காள சட்டமன்றத்திற்கு தொடருந்து தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு இந்திய பொதுவுடமைக் கட்சி பிளவுபட்டபோது புதிதாக துவக்கப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழுவில் (பொலிட்பீரோ) முதல் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார்.

முதல் அரசியல்தலைமைக்குழுவில் அப்போதைய கட்சியின் பொதுச்செயலர் பி.சுந்தரய்யா, பி.டி.ராணாதேவ், பிரமோத் தாஸ் குப்தா, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், எம்.பசவபுன்னையா, ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முதல் தலைமைக்குழுக் கூட்டம் கோவையில் தான் நடைபெற்றது.




முதல் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுடன் ஜோதிபாசு: நன்றி-கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி


பின்னர் கொச்சி (1968), மதுரை (1972), ஜலந்தர் (1978), விஜயவாடா (1982), கோல்கத்தா (1985), ஹைதராபாத் (2002), தில்லி (2005) ஆகிய நகரங்களில் நடைபெற்ற அரசியல்தலைமைக்குழுக்களில் ஜோதிபாசு இடம்பெற்றிருந்தார். கடைசியாக கோவையில் 2008-ல் நடைபெற்ற அரசியல்தலைமைக்குழுக் கூட்டத்தில் உடல்நலம் காரணமாக பங்கேற்கவில்லை.

அவசர நிலை:

1967 மற்றும் 1969 ஆண்டுகளில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1975 இல், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவெங்கும் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டது, பொதுவுடமைவாதிகள் வேட்டையாடப்பட்டார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரம் முன்னணி பொதுவுடமை ஊழியர்களை இந்தியா இழந்தது, அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை மேற்கு வங்க மாநிலம் இழந்தது. இருப்பினும் அஞ்சாமல் செயல்பட்ட ஜோதிபாசு உள்ளிட்ட பொதுவுடமை தலைவர்கள், மக்களின் ஆதரவை வென்றெடுத்தார்கள்.

இடது முன்னணி:

அதனைத் தொடர்ந்து 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணி பெரும்பான்மை பெற்றது. 21-61977 முதல் 6-11-2000 வரை தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

அந்த அரசு நிலச் சீர்திருத்ததை அமல்படுத்தியது. சுதந்திரத்திற்கு முன்பாக நில உடமை என்பது அரசர்களைச் சார்ந்ததாக இருந்தது. பெரும்பாலான நிலங்கள் பெரிய ஜமீந்தார்களிடமும், அரச பரம்பரையின் கடைக்கண் பார்வை பெற்றவர்களிடமும் இருந்தது. மிக முக்கியச் சொத்தான நிலம் இவ்வாறு சிறு பகுதியினரின் கீழ் இருந்ததை மாற்றி. உழைக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. மேலும், பொது வினியோக முறை, கல்வி, பொது சுகாதாரம் பேணுதல் எனப் பலவிசயங்களிலும் அந்த அரசு சிறப்பாக செயல்பட்டது.

2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு பதவியிலிருந்து விலகினார். அவரது நம்பிக்கைக்குரிய புத்ததேவ் பட்டாசார்யா அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஜோதிபாசுவின் கனவுகளை நிறைவேற்றுவதும், சரிந்து கிடக்கும் பொதுவுடமை கட்சி செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்துவதும் தான் அவருக்கு தோழர்கள் செய்யும் கைமாறு. அவரது இழப்பு பொதுவுடமை கட்சிக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் பேரிழப்பு.

முதுபெரும் தோழர் ஜோதிபாசுக்கு மீண்டும் ஒருமுறை சிவப்பு வணக்கம்!!!!!!..


தோழமையுடன் நெல்லை பொடியன்

கறுப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?

Thursday, January 14, 2010




தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என தமிழகத்தின் வீதியெங்கும் முழங்கி வந்த விஜயகாந்த், ஒத்தக் கருத்துடைய கட்சியுடன் கூட்டணிக்கு தயார் என அந்தர் பல்டி அடித்துவிட்டார். 21-ம் நூற்றாண்டில் பிற துறைகளில் ஏற்பட்டதுபோல அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (பணம் இருந்தால் அரசியல் செய்ய முடியும் என்பதை தாங்க இப்படி நாசுக்காக சொல்கிறோம்), கட்சி துவக்கிய 5 ஆண்டுகளில் கிடைத்த பழுத்த அனுபவங்கள் உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களால் விஜயகாந்த் பல்டி அடித்திருக்கலாம்.



தமிழகத்தில் மாறிமாறி வரும் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்ற வீர வசனத்துடன், 2005ல் தே.மு.தி.க., வை துவக்கினார் விஜயகாந்த். கேப்டன் என தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அடைமொழியை பயன்படுத்தி, கிராமங்களில் செழித்துவளர்ந்த எம்.ஜி.ஆர் வாக்குவங்கியை அறுவடை செய்தார் விஜயகாந்த்.

எட்டு மாத குழந்தை பருவத்திலேயே 2006-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலை கூட்டணியின்றி சந்தித்தது தேமுதிக கட்சி. பாமகவின் கோட்டையான விருத்தாச்சலம் தொகுதியில் (ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள தொகுதி) துணிச்சலுடன் நின்று சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று பாமகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜயகாந்த். பிற தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர்களில் 99 சதவீதத்தினர் 3-வது இடத்தை பிடித்தனர்.

பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி தேமுதிக பெற்ற வாக்குகளால் மாறிப்போனது. தமிழக அரசியலில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை உருவானது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு வியப்பளிக்கும் வகையில் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக.

திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரியகட்சி தேமுதிக தான் என ஜனநாயக ரீதியாக நிரூபித்தது அக் கட்சியின் வாக்குவங்கி. பொதுத்தேர்தல் முடிந்த ஆறு மாதங்களில், சபாநாயகர் பழனிவேல்ராஜன் மறைவால், மதுரை மத்தியத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை விட 2,515 ஓட்டு மட்டுமே குறைவாக பெற்று மூன்றாவது இடத்தை தே.மு.தி.க., பிடித்தது. பொதுத்தேர்தலில் 8.38 சதவீதமாக இருந்த தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, இத் தேர்தலில் 19.13 சதவீதமாக உயர்ந்தது.



இதைத் தொடர்ந்து, எட்டு மாத இடைவெளியில், மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தே.மு.தி.க., சந்தித்தது. இந்த தேர்தலில் 18 சதவீத ஓட்டுகளைப் பெற்று தனது பலத்தை வெளிப்படுத்தியது. இந்த இரு தேர்தல்களிலும், தே.மு.தி.க.,விற்கு மக்கள் வழங்கிய ஆதரவு, அ.தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தி.மு.க., வுக்கு மாற்று சக்தியாக தேமுதிக என மக்கள் அங்கீகரித்து விட்டனர் என்பதோடு, 2011ம் ஆண்டில் கேப்டன் ஆட்சி தான் என்ற முரசு கொட்டினர் தேமுதிக தொண்டர்கள்.

தேமுதிகவின் வாக்கு வங்கியை கண்டு புருவம் உயர்த்திய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மக்களவைத் தேர்தலின்போது விஜயகாந்துடன் ரகசிய பேச்சு நடத்தின. 7 சீட், 600 கோடி ரூபாய் வேண்டும் என காங்கிரஸ் கட்சியுடன் பேரம் பேசியதாகவும், ஆனால், 5 சீட், ரூ.250 கோடி தருவதாக காங்கிரஸ் ஒத்துக்கொண்டதாகவும் தேமுதிக மீது விமர்சனம் எழுந்தது.

இருப்பினும் தனித்தே களம் இறங்கிய தேமுதிக, மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், அடுத்து வந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேமுதிகவுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றன.

தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தே.மு.தி.க., பக்கம் ஓரளவு சாய்ந்தது. தே.மு.தி.க.,வின் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, சமீபத்திய இடைத்தேர்தலில் மாயமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு 17 ஆயிரத்து 57 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், தற்போதைய இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 7,063 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதே போல், கடந்த மக்களவைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் 9,712 ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க., தற்போதைய இடைத் தேர்தலில் வெறும் 4,186 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.


கரடு, முரடாண அரசியல் பாதையில் தனித்து செல்வது விஜயகாந்துக்கு பிடிக்கலாம். அவரது மனஉறுதி அப்படி. ஆனால், கட்சித் தொண்டர்கள் எத்தனைநாள்தான் கரடு, முரடாண பாதையில் அவருடன் பின்தொடர்ந்து வருவார்கள். எனவே, இதே பாதையில் பயணித்தால் அரசியலில் கரையேற முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் விஜயகாந்த்.

இத்தகைய நெருக்கடியான நிலையில் தான் கூட்டணிக்கு தயார் என திமுக, அதிமுகவின் பார்முலாவுக்கு மாறிவிட்டார் விஜயகாந்த். கரடு முரடாண பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் பயணம் செய்ய காத்திருக்கிறார் விஜயகாந்த். அந்த பாதை போயஸ் தோட்டம் (அதிமுக) வழியாக செல்கிறதா?, கோபாலபுரம் (திமுக) வழியாக செல்கிறதா? அல்லது சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ்) வழியாக செல்கிறதா? என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போயஸ் தோட்டம் நோக்கி பயணித்து அம்மா பிள்ளையாக மாறிவிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர் விஜயகாந்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல்நோக்கர்கள். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது
கருப்பு எம்.ஜி.ஆரின் பாதை வெளிச்சமாகிவிடும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கலைஞரின் கள்ளக் கணக்கும்!

Thursday, January 7, 2010




தினமணியின் தலையங்கபக்க துணை கட்டுரையில் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கணையுடன் கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் (19-9-2009) உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கலைஞர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஈழத்தில் தமிழர்கள் பரிதாப நிலையில் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாமா? என்ற ஆதங்கம் தமிழ் அறிஞர்களுக்கு. ஆனால், உடன்பிறப்புகளுக்கும், கதர்சட்டைகளுக்கும் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.

கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்காலத்தை (சட்டப்பேரவை தேர்தலை) கணக்கு போட்டு வழக்கம்போல கலைஞர் காய்நகர்த்துகிறார் என்ற கிசுகிசுப்பு கிளம்பியது. உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் உரிய அனுமதி வழங்காததால், உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக 29-9.2009-ல் மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஜனவரியில் நடத்தப்பட இருந்த மாநாடு, ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தநாள் முதல் இதுவரை இது தொடர்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.

இது அவரது சொந்த விருப்பம் அல்லது முதலமைச்சர் என்ற முறையில் அவர் வெளியிடும் அறிவிப்பாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அந்த அறிக்கையி்ன் விவரம்:
கோவையில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் திட்டத்தின்கீழ் கோவை உக்கடத்தில் ரூ.68 கோடி செலவில் 2 ஆயிரத்து 232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அம்மன்குளத்தில் ரூ.50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுதான் அறிக்கையின் சுருக்கம்.

இதை கோவைவாசிகள் (மாநகராட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது மாநகராட்சி தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்) தவிர, பிற மாவட்ட மக்களோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ வாசித்தால் ஆகா கோவைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். உலகத் தமிழ் மாநாடு நடப்பதால் கோடிக்கணக்கான நிதி கிடைக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின்றன. குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம் கோவை நகரமே சொர்க்கம் போல மாறிவிடும் என எண்ணத் தோன்றும்.

இதை உன்னிப்பாக ஆழமாக பார்த்தால் கலைஞரின் கள்ளக்கணக்கு அல்லது கலைஞர் அரசு அதிகாரிகளின் கள்ளக்கணக்கு வெட்டவெளிச்சமாகும்.

ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் கலைஞர் அரசின் திட்டம் அல்ல. இது மத்திய அரசின் கனவுத் திட்டம். ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 1998-ம் ஆண்டு முதல் இத் திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளிலும், பிற மாநிலங்களில் முக்கியமான மாநகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீடு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை இத் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது மத்திய அரசு. மாநில அரசின் பங்கு 20 சதவீதம். மீதமுள்ள 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. கலைஞர் ரூ.118 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்துள்ள அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஓராண்டுக்கு முன்பாகவும் (7-9-2008), உக்கடத்தில் கடந்த மே மாதத்திலும் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இப்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.




அம்மன்குளத்தில் 7.9.2008-ல் பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்


உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் (கலைஞர் அறிவித்த ஒரே வாரத்துக்குள் முளைத்துவிட்டது போலும்)

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை வாரியம் இந்த வீடுகளை கட்டி வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கியதாக எப்படி கணக்கு காட்டுகிறார் கலைஞர்?.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம். குடியிருப்புகள் கட்டத் துவங்கியது ஓராண்டுக்கு முன்பு. மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா கலைஞரே?. மாநாடு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கான நிதியையும் கணக்கு காட்டுவது எதற்காக?. புகழுக்காகவா? பெருமைக்காகவா? கள்ளக்கணக்கு காட்டவா?

உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உருப்படியான திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனில் கிடப்பில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து அதிகமான இடங்களில் சிங்கார சென்னைபோல அழகான மேம்பாலங்கள் (தேவை 10, குறைந்தபட்சம் 5), அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டியது தானே?.

அவற்றையெல்லாம் அறிவித்தால் கலைஞரின் குட்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்துவிடும். அதனால்தான், கண்ணாம்மூச்சு காட்டும் திட்டங்களை மட்டும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.

கோவை சிறையில் உலகத் தரத்துக்கு இணையான தாவரவியல் பூங்கா அமைக்கும் மற்றொரு மெகா மோசடி திட்டத்தையும் அறிவித்துள்ளார் கலைஞர். இப்போது இருக்கும் சிறையை மாற்ற சில காலம் பிடிக்குமாம் (10 ஆண்டுகளோ அல்லது 100 ஆண்டுகளோ தெரியவில்லை). பாதுகாப்பான இடம் வேறு இல்லை என்பது அடுத்த பிரச்னை. கட்டடம் இருக்கும் இடத்தை தவிர காலியாக இருக்கும் 93 ஏக்கரில் (மொத்த பரப்பு 165 ஏக்கர்) தாவரவியல் பூங்காவாம்.

உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சிறை வளாகத்தில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவை எப்படி போய் பார்ப்பது? எப்போது சிறை வேறு இடத்துக்கு மாற்றப்படும்? தாவரவியல் பூங்கா மக்கள் பார்வைக்கு எப்போது திறந்துவிடப்படும்? அத்தைக்கு மீசை எப்போது முளைக்கும்? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்க வேண்டியது தான்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக திட்டங்களை, அதிமுகவும், அதிமுக திட்டங்களை, திமுகவும் தொடராது என்பது எழுத்தப்படாத அரசியல் கோட்பாடு. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்துவிட்டால், கோவை சிறையில் தாவரவியல் பூங்கா என்பது பகல்கனவாகிவிடும்.

உருப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழர்களையும், கோவைவாசிகளையும் திருப்திபடுத்துவதற்கு பதில், கள்ளக் கணக்கு, கானல் நீர் போன்ற திட்டங்களை அறிவித்து கலைஞர் குழம்ப வேண்டாம். தமிழர்களையும் குழப்பவும் வேண்டாம். ஏமாற்றவும் வேண்டாம்.

இப்படிக்கு கலைஞரின் தம்பி....

நெல்லை பொடியன்