நித்யானந்தர் எனது பார்வையில்....

Thursday, March 4, 2010


   காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீணி கிடைத்திருக்கிறது.  காட்சி ஊடகங்களின் ரசிகர்களுக்கு அதைவிட கூடுதல் உற்சாகம். திரையரங்குக்குச் செல்லாமலே நீல படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. எல்லாம் நித்யானந்த சுவாமிகள் செய்த புண்ணியம்.

    நித்தியானந்தர் செய்தது சரியா?, தவறா? என டீக்கடைகள் தோறும் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.  சாமியார் என்றாலும் பாதிரியார் என்றாலும் இந்திரலோகத்தில் இருந்தோ அல்லது பரலோகத்தில் இருந்தோ பூலோகத்துக்கு குதித்துவந்தவர்களா?.    தாயின்  வயிற்றில் கருவாய் உருவாகி, அதிகபட்சம் ஒன்பரை மாதங்கள் உள்ளேயே வளர்ந்து குழந்தையாய் பிறந்தவர்கள் தானே?.

       சாமியார்களும் மனிதர்கள்தான் என்பதை மறந்து, அவர்களை கடவுளின் மறுவுருமாகவே வழிபடும் பக்தர்கள் இருக்கும் வரை ஒரு நித்தியானந்தர் அல்ல ஓராயிரம் நித்தியானந்தர் தோன்றிக்கொண்டே இருப்பதை யாராலும் தடுக்க இயலாது.
 

   இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், இன்பம் வரும்போது கடவுளை துதிக்கும் பக்தர்கள், துன்பம் வரும்போது இதுபோன்ற நித்தியானந்தர்களை அணுகுகின்றனர்.  பக்தர்களின் குறிப்பாக பெண் பக்தர்களிடம் இன்ப, துன்பங்களை அறிந்து, அவர்களுக்கு சகலவித ஆசி வழங்குகின்றனர் சாமியார்கள்.

    கருவறை முதல் படுக்கைஅறை வரை ஆசி வழங்குகின்றனர் சாமியார்கள். கருவறைக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், படுக்கையறைக்கு செல்லும்போது பெண் பக்தர்கள் யோசிக்க வேண்டாமா?. ஒருமுறை சென்றால் தவறுதலாக அல்லது மிரட்டப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டதாக கருதலாம். ஆனால், இதுபோன்ற போலி மடங்களில் காமிரா கண்களில் சாமியார்களுடன் சிக்கும் பெண்கள் பலமுறை செல்பவர்களாகத்தானே இருக்கிறார்கள்.


   நித்யானந்தர் மீது ஒரு வழக்கு போட்டால், இதுபோன்ற பக்தர்கள் மீது ஆயிரம் வழக்கு போட வேண்டும். அப்போது தான் பக்தர்கள் திருந்துவார்கள். பக்தர்கள் திருந்திவிட்டால் சாமியார்கள் தானாக திருந்திவிடுவார்கள்.   இறைவன் ஒருவர் இருக்கிறார் என்றால் அவரிடம்  நேரடியாக பேசுங்கள். அவரிடம் பேசுவதற்கு இடைத்தரகரை நாடுவது ஏன்?

   நித்யானந்தரா இப்படி செய்துவிட்டார் என அவரது பக்தர்களுக்கு மட்டுமல்ல. பலருக்கும் அதிர்ச்சி. ஆனால், அவரும் மனிதர் தான் என்பதை மக்கள் மறந்தது ஏனோ?.

இயற்கையை செயற்கையால் கட்டுப்படுத்த இயலாது என்பது இயற்கை கோட்பாடு. பெண்ணாசை வருவது இயற்கை. சாமியார் வேசம் என்பது செயற்கை. இப்போது மீண்டும் ஒருமுறை ஆழமாக யோசித்து பாருங்கள். இயற்கையை செயற்கையால் கட்டுப்படுத்த இயலாது.

தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள்!

Monday, March 1, 2010

தினமணி கதிரில் 28.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்

மலேசியாவில் மக்கள்புரட்சியை ஏற்படுத்தி அரசு ​பதவியை கைப்பற்றிய முதல் தமிழர்.​ அந்நாட்டின் சுதந்திர வரலாற்றில் உயர்பதவிக்கு வந்த முதல் தமிழர் என்ற முத்திரையை பதித்தவர்.​ குடும்பம்,​​ அரசியல்,​​ பண பலம் உள்ளிட்ட எவ்வித பின்புலமும் இன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அந்தப் புரட்சித் தமிழர்.​ விடுதலைப்புலிகளின் முதல்நிலை தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தவர்.​ மலேசிய தமிழர்களால் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல்கொடுத்து வருபவர்.​ அவர் தான் ​ பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி.நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக இருக்கும் ராமசாமி,​​ இப்போது ​ மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார்.​ கோவையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்திருந்தார் ராமசாமி.​ கோவையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை பேட்டிக்காக அணுகினோம்.எளிமையான உடையில் சாதாரண மனிதனைப் போல காட்சி... அவரிடமோ விசாலமான பார்வை,​​ தொலைநோக்கு எண்ணம் பளிச்சிட்டது.​ இனி அவரிடம் பேசியதிலிருந்து..
கல்லூரி பேராசிரியராக இருந்த நீங்கள் அரசியலுக்கு வந்தது எப்படி?​​

அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான்,​​ மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன்.​ மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன்.​ இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன்.​ ஆனாலும்,​​ அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை.​ நேரு,​​ சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன்.​ மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.

களைச் செடியாகும் கற்பகத்தருக்கள்

Tuesday, February 23, 2010

23.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
இந்து புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,​​ ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு.​ தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் ​ கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.​ நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,​​ முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,​​ வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.​ இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.​ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,​​ இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.​ பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.​ இதன் உச்சியில்,​​ கிட்டத்தட்ட 30 -​ 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.​ ​​ ஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.​ இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.​ அரசும்,​​ மக்களும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.​ ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.​ இந்தியாவில்,​​ கேரளம்,​​ கோவா,​​ மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள்,​​ தமிழகத்தில் கன்னியாகுமரி,​​ திருநெல்வேலி,​​ மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.​ ​ இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.​ 1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம்.​ அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும்,​​ நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது.​ ​ உள்நாட்டுப் போரினால் மட்டும்,​​ 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.​ அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,​​ 30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.​ இலங்கையில் இருந்து பதனீர்,​​ கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.​ இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.÷தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.​ பதநீர் விற்பனையை அதிகரித்து,​​ அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.​ ​​ ​ பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு,​​ நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் ​ பனையிலிருந்து பெற முடியும்.​ பொதுவாக,​​ இது வளரும் இடங்களில் எல்லாம்,​​ வசதியற்ற ஏழை மக்களின் ​பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.÷பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர்,​​ பனை வெல்லம் -​ 25 கிலோ,​​ பனங்கற்கண்டு -​ 16 கிலோ,​​ தும்பு -​ 11.4 கிலோ,​​ ஈக்கு -​ 2.25 கிலோ,​​ விறகு -​ 10 கிலோ,​​ ஓலை -​ 10 கிலோ,​​ நார்-​ 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.​ ​ பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,​​ விலங்குகளின் உணவும் அடங்கும்.​ கட்டடப் பொருள்கள்,​​ அலங்காரப் பொருள்கள்,​​ வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.​ ​ முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.​ இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.​ அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து,​​ ஜெர்மனி,​​ பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.​ ​​ ​ அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள்,​​ தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.​ ​​ ​ இதுபோல தமிழுக்கும்,​​ தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்.​ தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,​​ தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.​ ​ ​ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ​(குறிப்பாக தென்மாவட்டங்களில்)​ பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்,​​ பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.​ ​அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.​ இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.​ ​ 21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.​ எனவே,​​ பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,​​ வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.​ ​ மாநில மரம் என்ற வகையிலும்,​​ தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற ​ வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம்.​ ​​ ​ பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் ​ கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது,​​ பனையில் இருந்து ​ கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம்.​ பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.


நன்றி: தினமணி

தமிழனுக்கு பாடம் எடுத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

Saturday, February 20, 2010


நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது மெத்தப்படித்த சில மேதாவி தமிழர்களின் வழக்கமான செயல். அதிலும் சில கோமாளிகள் தங்கிழிஷில் (தமிழ், ஆங்கிலம் கலந்து) பேசி தன்னையும் ஏமாற்றி, பிறரையும் ஏமாற்றுவது இயல்பு. கோவையில் ஒரு அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றது.
மத்திய அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் சார்பில் குளோனிங் மரக்கன்றுகள் வெளியிடும் நிகழ்ச்சி கோவை வனக்கல்லூரி வளாகத்தில் 18.2.2010-ல் நடைபெற்றது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் ஜி.குமாரவேலு, சற்று சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். இதைப்பார்த்த ஜெய்ராம் ரமேஷ், குமாரவேலு தமிழில் பேசுங்கோ எனக்கு புரியம் என்றார்.
இருப்பினும் குமாரவேலு, தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்தார். குமாரவேலுவின் ஆங்கில பேச்சை ஜெய்ராம் ரமேஷால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், தமிழ் பேச்சை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. அமைச்சரின் தலைஅசைப்பு, முகபாவணையில் இருந்து இதை தெளிவாக அறிய முடிந்தது.
சிறப்புவிருந்தினருக்கும் புரியாமல், கூடியிருந்த தமிழ் விவசாயிகளுக்கும் புரியாமல் இதுபோல தங்கிழிஷில் பேசும் தமிழ் கோமாளிகளை என்ன செய்ய? என்ற நியாயமான கேள்விக்கணை கூடியிருந்த விவசாயிகளின் மனதில் இருந்து வெளிவந்ததை காண முடிந்தது.

லட்சம் பேருக்கு விருந்து!

Monday, February 15, 2010

தினமணி கதிரில் 14.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்


திருவிழா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் உண்டாகும்.

அதிலும் நாடு முழுவதும் பரவியிருக்கும் கிராமவாசிகள் ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் கூடி திருவிழா கொண்டாடினால் எப்படி இருக்கும்? நேரடியாக சென்று பார்த்தால், அனுபவித்தால் தான் அந்த சந்தோஷத்தை உணர முடியும்.


அப்படிப்பட்ட ஆச்சரியமளிக்கும் திருவிழா நடப்பது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மெய்ஞ்ஞானபுரம் கிராமத்தில்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அசனத் திருவிழா பிரசித்தி பெற்றது. மெய்ஞ்ஞானபுரத்தில் உள்ள பரி. பவுலின் ஆலயத்தில் 163 ஆண்டுகளாக இத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு கடிதம் விலை ரூ.15,000



பத்திரிகையாளனாக இருப்பதால் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது ஆளும்கட்சி செய்யும் சில தவறுகளை எதிர்கட்சி நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டுவேன்.

ஒரு வாரத்துக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவரை சந்தித்து நீண்டநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவரிடம், கோவை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்களுக்கு எதிரான முடிவுகளை மாநகராட்சி எடுக்கும்போது, அதிமுக கவுன்சிலர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மாநகராட்சியில் தான் இப்படி என்றால், கோவை மாவட்டத்திலும் இதுபோல இதுபோல பல மக்கள்விரோத பிரச்னைகள் நடைபெறுகின்றன. இப் பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தினால் அதிமுகவுக்கு ஆதரவு கூடுமே?. உங்கள் மாவட்டச் செயலர் செ.ம.வேலுச்சாமி எம்.எல்.ஏ.விடம் இதுபற்றி பேசக்கூடாதா? என வினவினேன்.

என்ன சார் நீங்க. மாவட்டச் செயலரிடம் பலமுறை பல பிரச்னைகளை கூறிவிட்டோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடையொட்டி சுமார் 3,000 வீடுகள் ஏழைகளுக்கு கட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது என கருணாநிதி பொய் தகவல் கூறும்போதுகூட செ.ம.வேலுச்சாமியிடம் கூறினேன். அம்மாவிடம் (ஜெயலலிதா) தகவல் தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தலாம் என்றேன். அவரோ கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை.

சரி கட்சியில் மூத்த உறுப்பினராக இருக்கும் நீங்களாவது இதை உங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கக்கூடாதா? என்றதும் அவரிடம் இருந்த வந்த பதிலை கண்டு எனக்கே சற்று அதிர்ச்சி ஏற்பட்டது.

இதோ அவரது பதில் இதுதான்: கடிதம் அனுப்பலாம். புகார் அனுப்பலாம். ஆனால் அது அம்மா பார்வைக்கு நிச்சயம் போகாது. அவருக்கு செல்வதற்கு முன்பே செ.ம.வேலுச்சாமிக்கு தகவல் வந்துவிடும், உங்கள மாவட்டத்தில் இருந்து புகார் கடிதம் வந்துள்ளது என்று. அடுத்து என்ன; அடுத்தமுறை சென்னைக்குச் சென்றதும் ரூ.15,000 கொடுத்தால் போதும் கடிதம் செ.ம.வேலுச்சாமியின் கைக்கு வந்துவிடும்.

கோவை மாவட்டச் செயலர் மட்டும் தான் இதுபோன்ற சாமர்த்தியவாதி என நீங்கள் எண்ணிவிட வேண்டாம். இதுபோல வரும் புகார் கடிதங்களை வைத்தே மாதத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யும் கும்பல் போயஸ் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. பின்ன எப்படி சார் அதிமுக ஆட்சிக்கு வர முடியும். இதெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருக்கும் எங்களை போன்ற தொண்டனின் உள்ளக் குமுறல் சார்.


என் பெயர் வெளியில் வராத வகையில் எப்படியாவது இதை வெளிப்படுத்துங்க சார்ன்னு சொன்னார் அந்த கள்ளம் கபடு இல்லா அதிமுக தொண்டர். என்ன பண்ணுறது இருக்கவே இருக்கு. நம்ம வலைப்பதிவு. தாய்த் தமிழக அரசியல் எப்படி இருக்கு பாத்திங்களா உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் சொந்தங்களே?.

உள்கட்சிக்குள் இருக்கும் பிரச்னைக்கே தீர்வுகாண முடியாமல் தவிக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களால், உலகில் பல நாடுகளில் வசிக்கும் தமிழ்ச் சொந்தங்களின் பிரச்னைகளுக்கு எப்படிங்க தீர்வுகாண முடியும்?.

மலேசியாவின் ராஜபக்ஷ நஜீப் டன் ரசாக்

Thursday, February 11, 2010


மலேசிய பிரதமர்


வசந்தகுமார் கிருஷ்ணன்


கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்
மலேசிய நாட்டின் இந்து உரிமை நடவடிக்கை குழு (இன்ட்ராப்) தலைவரும், மலேசிய இந்தியன் குரல் அமைப்பின் ஆலோசகருமான வசந்தகுமார் கிருஷ்ணன் பங்கேற்றார்.

2 ஆண்டுகள் சிறையிலும் பின்னர் வீட்டுக்காவலிலும் இருந்த அவர், முதல்முறையாக வெளிநாட்டு பயணமாக கோவைக்கு வந்திருந்தார். சிறைவாசத்துக்குப்பின் தான் பங்கேற்கும் முதல் மாநாடு தமிழர் பாதுகாப்பு மாநாடு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இனி அவரின் நேர்முகம்:

கேள்வி: இன்ட்ராப் இயக்கம் தோன்றியது ஏன்?

பதில்: மலேசிய நாட்டில் இந்து கோயில்கள் குறிப்பாக தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்ட வருகிறது. இதை தடுக்கவே இன்ட்ராப் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

கேள்வி: மலேசியாவில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது?

பதில்: தமிழர்களின் வளர்ச்சியை மலேசிய அம்னோ கூட்டணி அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியை தடுத்துவிடலாம் என எண்ணி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களுக்கு மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.

கேள்வி: தமிழை குறிவைத்து தடைபோடுதற்கான காரணம் என்ன?.
பதில்: தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவி்ட்டால், அரசியல் ரீதியாக தமிழர்கள் அதிகாரத்துக்கு வருதவதை தடுத்துவிடலாம் என சூழ்ச்சியுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.

கேள்வி: மலேசிய அரசியல் சாசனங்களில் தமிழர்கள் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: மலேசிய அரசியல் சாசன சட்டம் பிரிவு 8-ன்படி மலாய், சீனர், இந்தியர்கள் என அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பிரிவு 12-ன்படி கல்வியில் மூன்று மொழிகளுக்கும் (மலாய், சீனம், தமிழ்) சமஉரிமை
வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் மதிக்காமல் தமிழர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறது மலேசிய அரசு.

இதுதாங்க 8-வது உலக அதிசயம்!!!


கவிதையை வெளியிட்ட புலவர் பட்டணம் பழநிச்சாமி



கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை இது. உலகம் முழுவதும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காக இதை வெளியிடுகிறேன்.


தமிழகம் உள்ள தமிழர்கள் எல்லாம் தமிழய்ப் படித்தல் அதிசயம்
தமிழகக் கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனய் அதிசயம்
தமிழக வழக்கு மன்றங் களிலே தமிழில் புழங்கல் அதிசயம்
தமிழில் பெயருடன் தலய்முன் எழுத்தும் தமிழ்க்கய் எழுத்தும் அதிசயம்

தமிழர் இருவர் சந்தித் தாலே தனித்தமிழ் பேசுதல் அதிசயம்
தமிழர் குழந்தய் பெற்றோர் கூப்பிடல் அம்மா அப்பா அதிசயம்
தமிழர் குழந்தய்ப் பெயர்கள் எல்லாம் தமிழில் சூட்டல் அதிசயம்
தமிழர் சிறப்பணி உருமால் கட்டல் தமிழ் நாட்டினிலே அதிசயம்

தமிழ்நில முல்லய் சாமய்கொள்ளு சமயல் காண்பது அதிசயம்
தமிழர் கும்மி பிம்பிலி ஆட்டம் தமிழகம் நடப்பது அதிசயம்
தமிழர் கும்பிடும் வணக்கம் வாழ்த்து தகுதியில் புழங்கல் அதிசயம்
தமிழே இன்னும் இருபது ஆண்டில் ஆட்சியில் இருந்தால் அதிசயம்

தமிழகம் அதிகம் படித்திட்ட பேர்கள் தங்குதல் இங்கே அதிசயம்
தமிழகச் செல்வர் அடிக்கடி வெளிநாடு தாவாமல் இருந்தால் அதிசயம்
தமிழகப் பொதுநலப் பிரச்சினய் ஒற்றுமய் தாங்கிப்பழகல் அதிசயம்
தமிழக உறவுகள் சச்சர வின்றி சமமாய் வாழ்தல் அதிசயம்

தமிழய்த் தாழ்த்தும் ஆங்கில வருடிகள் தமிழாய் தழய்த்தல் அதிசயம்
தமிழே மூச்சு என்போர் எல்லாம் மக்கள் தமிழ்ப் பள்ளி சேர்த்தல் அதிசயம்
தமிழில் தனித்துவம் கொண்டவர் செயலப் தகவில் ஆய்தல் அதிசயம்
தமிழ்ப் போராளி என்கிற பேரும் ழகரம் ஒலித்தல் அதிசயம்

தமிழுக்காக உயிர்கொடுத்தோரின் சமாதி வணக்கம் போதாது
தமிழர் என்போர் எழுச்சியும் கொண்டு முன்னோர் பெருமய் எண்ணுங்கள்
தமிழின் வீழ்ச்சி ஏற்படும் போதில் தமிழா வாழ்ந்து என்ன பயன்?
தமிழுணர்வில்லாத் தடிமாடுகளே தற்கொலய் செய்து தொலையுங்களேன்!


படைப்பை ஆக்கியோன்: அருள்நிதிப் புலவர் பட்டணம் பழநிச்சாமி
வளர்கோகுலம் இல்லம்,
கோவய்-25,
தமிழ்நாடு,
இந்தியா,
செல்போன்-9363266820


(குறிப்பு) இவரது படைப்புகள் தொடர்ந்து எனது வலைப்பதிவில் வெளியாகும்

சிதம்பரத்தின் முகமூடியை கிழித்த சி.பி.ஐ.

Wednesday, February 10, 2010


ப.சிதம்பரம்


சி.பி.ஐ.இயக்குநர் அஸ்வின் குமார்

தமிழீழ விடுதலைப்புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? என்ற குழப்பத்தில் இருப்பது இலங்கை அரசு மட்டுமல்ல. இந்திய அரசும் தான். உள்மனதுக்குள் குழப்பம் இருந்தாலும், உண்மை தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப நினைக்கிறது இரு நாட்டு அரசுகள்.

பிரபாகரன் பற்றி தொடர்ந்து பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் வந்துவிட்டது திருவாய் மலர்ந்து புழுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

தில்லியில் ஒருவாரத்துக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிஐ உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என்றார். இதை அடுத்த நாளே மறுத்த அமைச்சர் சிதம்பரம், பிரபாகரன் சான்றிதழ் வந்துவிட்டது தனக்கே உரிய பாணியில் அமைதியாக அழுத்தம் திருத்தமாக கூறினார்.

ஆனால், சிதம்பரம் கூறியது பச்சை பொய் என தோலுரித்து காண்பித்துவிட்டார் சி.பி.ஐ.
இயக்குநர் அஸ்வின் குமார். பிரபாகரன் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என பிப்.9-ம் தேதி உறுதிப்பட கூறி சிதம்பரத்தின் முகமூடியை கிழித்துவிட்டார்.

பிரபாகரனின் மரணச் சான்றிதழ் வந்தால் சி.பி.ஐ.க்கு தெரியாமல் இருக்காது. சி.பி.ஐ.-க்கு தெரியாமல் சான்றிதழ் வந்துவிட்டது. ஒருவேளை இலங்கை அதிபர் ராஜபக்ஷ
சிதம்பரத்திடம் ரகசியமாக கொடுத்துவிட்டாரா? கொடுத்த சான்றிதழை சிதம்பரம் தனது வீட்டு பரணில் பாதுகாப்பாக வைத்துள்ளாரா?.

இந்திய அரசின் அமைச்சரவையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் மூத்த அமைச்சர்
தவறான தகவலை தெரிவிக்கலாமா?. இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உறுதிபடுத்தவும் முடியவில்லை.

தனி ஈழம் ஏன்?

Saturday, February 6, 2010



உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகிறார் மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசியர் இராமசாமி.



கோவையில் சனிக்கிழமை துவங்கிய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ நாடு அமைக்கும் குழுவின் உறுப்பினருமான பேராசியர் முனைவர் இராமசாமி ஆற்றிய உரை:



உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேணஅடிய அவசியம் வந்துள்ளது.

5 ஆண்டுக்குள் தனி ஈழம் அமையும்




மாநாட்டில் பேசுகிறார் புலவர் புலமைப்பித்தன்

தமிழ்நாட்டின் கோவை கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் துவக்கிவைத்து ஆற்றிய உரை:

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. நிதி திரட்டுவதற்காக கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எனது நண்பர் கலைஞர் கருணாநிதி நடத்துகிறார். ஆனால், நீதியை நிலைநாட்ட இங்கு மாநாடு நடக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிமன்ற படிகட்டுகளில் ஏறித்தான் இம்மாநாட்டுக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் தந்தை செல்வா போராட்டம் நடத்தினார். இருப்பினும் தீர்வு கிடைக்காததால் ஆயுதப்புரட்சி ஏற்படுத்த வேண்டிய நிலை உருவானது. ஆயுதப்புரட்சியை துவக்கிவைத்ததற்கு நானும் ஒரு காரணமானவன்.

எம்.ஜி.ஆரிடம் பேசி தம்பிக்கு ரூ.2 கோடி வழங்கினோம். இந்த பணத்தில் ஆயுதம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆயுதப் போராட்டத்துக்கு தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், முடிந்துவிட்டது என யாராவது கூறினால் அவர்கள் முட்டாள்கள். எந்த ஒரு சுதந்திர போராட்டத்துக்கும் பின்னடைவு ஏற்படுவது இயற்கையானது. ஆனால், அதில் இருந்து மீண்டு எழும்பும். அதுபோல தான் ஈழ விடுதலைப் போராட்டமும். இன்னும் 5 ஆண்டுகளில் ஈழத்தில் சுதந்திர கொடியேற்றப்படும். அந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்.


இலங்கை ராணுவம் மட்டும் தனியாக விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தால் 30 நாட்களில் விடுதலைப்புலிகளால் வெற்றிப் பெற முடியும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ராணுவங்களுடன் இலங்கை ராணுவம் இணைந்து போரிட்டதால் தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.

இந்தியா தான் போரை முன்னின்று நடத்தியது என்பதற்கு பல ஆதாரங்களை கூற இயலும். என்.டி.டி.வி.யின் தலைமை நிருபர் நிதின் கோகலே எழுதியுள்ள புத்தகத்தில் பல சான்றுகளை காண்பித்துள்ளார். 2006-ம் ஆண்டில் 17 ஹெலிகாப்டர்கள், 2 போர் கப்பல்களை இலங்கை ராணுவத்தின் வண்ணம் பூசி இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். இதுபோல பல தந்திரங்களை இந்திய ராணுவம் கையாண்டுள்ளது.


உலகில் 10 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழனுக்கென்று தனி நாடு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். 2008-ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக எனது நண்பர் கருணாநிதி அறிவித்தார்.

அறிவித்தப்படி அவர் ராஜினாமா செய்திருந்தால் ஈழத்தில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்கலாம். அவர் ராஜினாமா செய்தால் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இலங்கை ராணுவத்துக்கு இந்திய உதவி கிடைத்திருக்காது.

மிகப்பெரிய களங்கத்துக்கு ஆளாகிவிட்டார் எனது நண்பர் கருணாநிதி. இந்த களங்கத்தை துடைக்க தான் கோவையில் உலத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார். கங்கையில் உள்ள அனைத்து நீரை வைத்து அவர் கைகழுவினாலும் களங்கத்தை துடைக்க இயலாது.

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் 2, 3, 4-ம் தர குடிமக்களாகத்தான் வாழ்கின்றனர். முதல்தர குடிமகனாக, தனிநாடு உடையவராக தமிழர்கள் வாழ்ந்தால் தான் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படும்போது தட்டிக்கேட்க முடியும். தமிழனுக்கென்று தனி நாடு ஈழத்தில் விரைவில் அமையும் என்றார்.

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு இன்று துவக்கம்: இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இருவர் பங்கேற்பு

Friday, February 5, 2010



கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாநாடு அரங்கை பார்வையிடும் டாக்டர் க.கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள்


உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (6,7-02-2010) நடைபெறுகிறது. இதில் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இருவர் பங்கேற்கின்றனர்.

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகள் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றனர்.

கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த தமிழ் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

முதல்நாள் (6-02-2010) நிகழ்ச்சிகள்:

காலை 10 மணி தமிழர் எழுச்சி கொடியேற்றம்,
காலை 10.15 மணி வீர வணக்கம்,
காலை 10.30 மணி சுடர் ஏற்றுதல்,
காலை 10.45 மணி மாநாடு துவக்கம்.

வரவேற்புரை-பேராசிரியர் அருணா,
தலைமை-டாக்டர் க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சி நிறுவனர்),
முன்னிலை- தெ.சீ.சு.மணி,
மாநாடு திறப்பாளர்-பேராசிரியர் ப.ராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாகாணம், மலேசியா.

மாநாடு துவக்க உரை: புலவர் புலமைப்பித்தன்

பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை புகைப்பட கண்காட்சி.

முதல்அமர்வு: கவிஞர் இன்குலாப், கவிதா சரண், எழுத்தாளர் சூரியதீபன், பாமரன், குமரவேல், சுஜிதா, கோவை ஞானி.

2-ம் அமர்வு: கண்ணா (மலேசியா), குமணராசா (மும்பை), சிவகாமிதேவி (கோலாலம்பூர்), பேச்சிமுத்து (கேரளம்), குருமூர்த்தி, பழனி (பெங்களூர்).


இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (07-022010)

முதல்அமர்வு (காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை)

அய்யநாதன், புதுக்கோட்டை பாவணன், புகழேந்தி தங்கராசு, சுந்தரேசன், பேராசிரியர் சரசுவதி, அருளானந்தம்.

வாழ்த்துரை:
மனோ கணேசன், சுரேஷ்பிரேமச்சந்திரன் (இலங்கை தமிழ் எம்.பி.க்கள்).
தமிழருவிமணியன், ஓவியா, பழ.கருப்பையா (சிந்தனையாளர்க
ள்).

நிறைவுரை:

பினாங்கு துணை முதலமைச்சர் ப.ராமசாமி,
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
தோழர் தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலர்)

நன்றியுரை: வே.க.அய்யர்.

இந்தியாவின் இரண்டு முகங்கள்

05.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்




உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.

நன்றி: தினமணி

சிதம்பரத்துக்கு சொரணை இருக்கா?

Thursday, February 4, 2010



புதுதில்லியில் 02-02-2010-ல் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தமிழையும், தமிழனையும் அவமானப்படுத்தும் வகையி்ல பேசியுள்ளார். தமிழை, தமிழனை, சக தமிழனே அவமதித்திருப்பது வெட்கக்கேடான செயல்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்களே என்று நிருபர் ஒருவர் தமிழில் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சிதம்பரம், தமிழில் கேள்வி கேட்கக் கூடாது. தமிழில் கேள்வி கேட்டால் இங்கே மற்றவர்களுக்கு புரியாது. ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என இருமாப்புடன் பேசியுள்ளார்.
அதேநேரத்தில் ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தனது தனது செயலரின் உதவியுடன் பதில் அளித்தார்.

ஹிந்தியில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் ஆங்கிலத்தில் கேளுங்கள் என எதிர்கேள்வி கேட்காமல் வாய்மூடி மௌனியாக சிதம்பரம் இருந்தது ஏன்? எதிர்கேள்வி கேட்டால் அதே இடத்திலேயே செருப்பு மூஞ்சிக்கு வரும். அடுத்த சில நாட்களில் பதவிக்கு ஆபத்துக்கூட வரக்கூடும்.

ஆனால், தமிழில் கேள்விகேட்கக்கூடாது எனக் கூறினால் செருப்பும் வராது, பருப்பும் வராது. சிதம்பரத்தின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு தமிழனிடம் ஒற்றுமையும் கிடையாது. இந்த சிதம்பர ரகசியத்தை அவர் ஏற்கெனவே அறிந்துவைத்திருப்பதால் தமிழை தலைகுனிய செய்துவிட்டார். இந்திய அரசில் உயர்பதவி வகிக்கும் ஒருவரே, ஒரு தமிழனே இப்படி செம்மொழி தமிழை அவமதிக்கலாமா? அல்லது அவமதிக்க தமிழக அரசியல்வாதிகள் விடலாமா?.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முதல் இடத்தில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியோ, அங்கேயுள்ள நிலையில் அன்றைய தினம் இருந்தவர்கள் வேற்றுமொழிக்காரர்கள். அவர்களுக்கு ஆங்கிலம், அதைவிட்டால் ஹிந்தி தான் தெரியும். ஆகவே, அந்த சூழல்நிலையில் அந்த கருத்தை சிதம்பரம் கூறியிருக்கிறார் என சிதம்பரத்துக்கு பல்லக்கு தூக்குகிறார்.

சிதம்பரம் தமிழில் பதில் கூறினால் என்ன குறைந்துவிடும். வாயில் இருக்கும் முத்து கீழே விழுந்துவிடுமா? அல்லது உயரத்தில் ஒரு அடி குறைந்துவிடுவாரா?. தமிழனாய் பிறந்து தமிழை தலைகுனியவைப்பது, பெற்ற தாயை பிள்ளேயே தலைகுனியவைப்பதற்கு சமம்.

ஐரோப்பிய நாடுகளில் பிறக்க வேண்டிய சிதம்பரம், தட்டுத்தடுமாறி தமிழகத்தில் தமிழனாய் பிறந்துவிட்டார். தடுமாற்றத்தால் தமிழனாய் பிறந்த சிதம்பரத்துக்கு இதெல்லாம் புரியுமா? என்பது கேள்விக்குறி தான். ஆனால், அவருக்கு புரியவைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.

பி.டி. கத்தரியே போ...போ....

Friday, January 22, 2010




கத்தரி செடியெல்லாம் காய்களாய் காய்த்து தொங்கும், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்ற கவர்ச்சி வாசகங்களுடன் பாமர விவசாயிகளுக்கு மாயவலை விரித்து வருகிறது பி.டி. கத்தரிக்காயை (மரபணு மாற்ற கத்தரிக்காய்) அறிமுகம் செய்யும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம்.

சமீபகாலமாக புதிய வகை பூச்சி கள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக் காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளிக்கப்படுகின்றன. அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துகிறோம் என்ற சப்பைகட்டு வாதங்கள் வேறு.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்தி­ருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி! அதாவது பல்வ­லி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!. இதற்கு ஜால்ரா போடுகின்றன இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள்.

இந்தியாவின் 5 வேளாண் பல்கலைக்கழகங்களில் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்பட) பி.டி. கத்தரி ஆய்வுப்பணிகள் முடிவுற்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளின் நாயகன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சர்ச்ச்சைகளின் நாயகன் ஜெய்ராம் ரமேஷுன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் தான் இக்குழுமம் இயங்கி வருகிறது.

தில்லி, கோல்கத்தா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுப்பின.

கத்தரியை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு. அதை விற்கும் செய்யும் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு. உண்ணும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு. ஆனால், பி.டி. கத்தரியை அறிமுகம் செய்தே தீருவோம் என அடம்பிடித்து வருகிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு வால்பிடிக்கின்றனர் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், மாநில வேளாண் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்.

பி.டி. கத்தரிக்கு அமைச்சர்களே வால்பிடிப்பது ஏன்?. மத்தியில் பிரதான எதிர்கட்சியான பாஜகவும், மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல நடித்து மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதன் ரகசியம் என்ன?.
பி.டி. கத்தரியின் உரிமையாளரான மான்சான்டோ நிறுவனம் கொட்டும் பண மழை தான்.

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா­னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எ­லிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரல் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று இ.ப. விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இங்லாந்து, பிரான்ஸ், இத்தா­லி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்ற விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான். ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

இத்தனை நாடுகளும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகள் பணத்துக்காக பல்லக்கு தூக்குவது வெட்கக்கேடான செயல். பணமழையில் நனைய வேண்டும் என ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்(அலைக்கற்றை), முத்திரைத்தாள் ஊழல், போபர்ஸ் ஊழல் என இன்னும் புதுப்புது ஊழல்கள்.
உணவை விஷமாக்கும் பி.டி. கத்தரியில் மட்டும் காசுபார்க்க வேண்டாம். தயவுசெய்து பி.டி. கத்தரிக்கு தடைபோடுங்கள் மாண்புமிகு அரசியல்கோமாளிகளே....

பெரியாரின் பேரனே இது நியாயமா?

Wednesday, January 20, 2010




எதிர்கட்சியினரே அமைதியாக இருந்தபோது கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருக்கும் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதியை அடிக்கடி சீண்டுவதும். பின்னர் அவரிடமே சரண்டர் ஆவதும் வழக்கம். மேளதாளம் வாசிப்பவர் என கலைஞரை விமர்சனம் செய்துவிட்டு, இளங்கோவன் பட்டபாடு படாதபாடு.

மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஈரோட்டில், அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இளங்கோவன் கொஞ்ச நாளாக முகவரி இல்லாமல் இருந்து வந்தார். பத்திரிகைகளில் பரபரப்பு பேட்டியோ, நக்கல், நையாண்டி தனமான பேச்சோ இல்லை.

இளங்கோவன் எங்கே இருக்கிறார் என பத்திரிகையாளர்களே தேடிவந்த நிலையில், ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுகிறார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டியதில்லை. இன்னமும் அவரது செயல்கள் பாராட்டத்தக்கவகையில் உள்ளன என மகுடிவாசித்திருக்கிறார்.

இதே மகுடியை ஒரு மாதத்துக்கு முன்பு வாசித்திருந்தால் கூட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கணக்கடங்கா குழுக்களில் ஏதாவது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கலாம். பாவம் காலம் கடந்த யோசனை தான்.

கொஞ்சம் பொறுத்திருங்கள் இளங்கோவன் அவர்களே!. உங்களை போல கலைஞரின் ஞாபகத்துக்கு வந்த அடிவருடிகள் மட்டும் தான் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இன்னமும் சிலர் கலைஞரின் ஞாபகத்துக்கு வரவாய்ப்பு உண்டு அல்லது வரவைக்கப்படவும் வாய்ப்புண்டு. அப்போதாவது உங்களது பெயரும் அக் குழுக்களில் இடம்பெற்றுவிடும்.

எதையும் தைரியமாக, ஆணித்தரமாக, பாமரனுக்கும் புரியம் மொழியில் எளிமையாக பேசி மக்களிடம் விழிப்புணர்வையும், புரட்சியையும் ஏற்படுத்தியவர் பெரியார். தாத்தாவின் பிறகுணங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும், தைரியமான பேச்சு மட்டும் உங்களிடம் இருக்குது என பெரியாரின் பேரன்கள் (தமிழர்கள்) பெருமைபட்டது உண்டு.

மனதில்படும் எதையும் பளிச்சென்றுகூறி வந்த நீங்கள், கருணாநிதிக்கு அடிவருடியாக மாறியதன் ரகசியம் என்ன?. கலைஞரின் சிறப்பாக செயல்படுகிறார்? என திமுக தொண்டன் கூறலாம். அதற்குகூட காரணம் உண்டு. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் கூட திமுக வெற்றி பெற முடியும் என்ற அளவுக்கு தனது சொந்த கட்சியை பலப்படுத்திவிட்டார்.

திமுக தொண்டன் கூற வேண்டிய கூற்றை, பெரியாரின் பேரன் கூறலாமா?. காங்கிரஸ் தொண்டன் என்பதை சற்று மறந்துவிட்டு, நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா? பெரியார் பேரன் மகுடிவாசிக்கலாமா?.

சரி பெரியாரின் பேரனாக உங்களால் கருத்துதெரிவிக்க முடியாது. காரணம் ஊரறிந்த விஷயம். அதை நாங்களும் விட்டுவிடுகிறோம். காங்கிரஸ் தொண்டனாக கூறுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?.

10 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் சுமார் 12 ஆயிரம் துவக்கப்பள்ளிகளை துவக்கி கிராமங்களில் கல்வி்த் தீபத்தை ஏற்றினார். மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி பெல் தொழிற்சாலை, ஆவடி கனரக இயந்திரங்கள் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, சேலம் இருக்கு உருக்காலை, தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை என தமிழகத்தில் தொழில்புரட்சி செய்தார்.

பேச்சிப்பாறை, பெருஞ்சானி அணைகள், பாபநாசம் அணை, பவானிசாகர் அணை, இன்னமும் சில அணைகள் என தமிழகத்தின் நீர்வளத்தை பெருக்கினார். தனது தாய், சகோதரி, குடும்பம் என எதையும் பற்றி யோசிக்காமல், தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் உழைத்தார்.

கலைஞரின் சாதனை என்ன?. மகன அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, இன்னொரு மகன் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, மகள் கனிமொழிக்கு மக்களவை உறுப்பினர் பதவி, பேரன் தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி, மற்றொரு பேரன் கலாநிதிமாறனுக்கு சன் டிவி குழுமம் (சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா டிவி, கே.டிவி, சன் மியூசிக், உதயா,.....), தனக்கு கலைஞர் டிவி.

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு. தமிழர்களை நிரந்தரமாக முன்னேற்ற, பொருளாதாரத்தை வலுப்படுத்த தொலைநோக்காக என்ன செய்தார் கலைஞர்?.



இளங்கோவன் அவர்களே எப்போதும் ஒரே மாதிரி பேசுங்கள். அடிக்கடி நிறம் மாறினால் வேறுபெயர் (பச்சோந்தி) கூறி அழைத்துவிடுவார்கள்

காங்கிரஸ் தொண்டனாக, காமராஜரின் விசுவாசியாக இப்போது கூறுங்கள் இளங்கோவன் அவர்களே!. கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?. தப்பி, தடுமாறி பெரியாரின் குடும்பத்தில் பிறந்துவிட்டதால், பெரியாரின் பேரன் என்ற பெருமைமிகுந்த பெயரை காப்பாற்ற சற்று வீரமாக பேசுங்கள். இல்லை முதுகெலும்பு இல்லையென்றால் அமைதியாக இருங்கள்.

பெரியாரின் தோரணையில் சொல்வதென்றால்...ஈர வெங்காயம் இளங்கோவன் அவர்களே கொஞ்சநாள் வாயை பொத்திகிட்டு இருங்க......

தோழர் ஜோதிபாசுவுக்கு சிவப்பு வணக்கம்

Sunday, January 17, 2010




இந்தியாவின் முதுபெரும் பொதுவுடமை தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு (96) கோல்கத்தா சால்ட்லேக்கில் உள்ள ஆம்ரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (17-01.2010)-ல் இறந்தார்.

இந்தியாவின் சிறந்த பொதுவுடமைவாதி, பொதுவுடமை தத்துவத்தை ஆட்சியில் செயல்படுத்தி வெற்றி கண்டவர், பிரதமராகும் வாய்ப்பை (இந்தியாவின் முதல் பொதுவுடமை பிரதமர் ஆகும் வாய்ப்பை) பொதுவுடமைவாதிகளால் இழந்தவர் என அடுக்கடுக்கான வார்த்தைகளால் தோழர் ஜோதிபாசுவை பற்றி குறிப்பிட முடியும்.

உலக வரலாற்றில் தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு நீண்ட காலம் ஆட்சியில் இருந்த முதல் பொதுவுடமை தலைவர் என்ற முத்திரையை பதித்தவர்.
மேற்குவங்கத்தில் 1977 முதல் 2000-ம் ஆண்டு வரை 5 முறை முதலமைச்சராக இருந்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நீண்டகாலம் (23 ஆண்டுகள்) முதலமைச்சர் பதவியை வகித்த பெருமைக்குரியவர்.


1996ஆம் ஆண்டு மைய அரசில் ஐக்கிய முன்னணியின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்க அனைவரின் ஒப்புமையைப் பெற்றபோதிலும் தம் கட்சியின் பொலிட்பீரோ விருப்பத்திற்கிணங்க அரசு அமைப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை வரலாற்றுப்பிழையாக பின்னர் பாசு குறிப்பிட்டார்.

ஆட்சிக் கட்டில் கிடைத்தால் போதும் சுடுகாடு போகும் வரை கட்டிலில் இருந்து இறங்கமாட்டேன் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. ஆனால், 2000-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி வெற்றிப் பெறக்கூடிய நிலையில் இருந்தும்கூட தனது உடல்நலத்தை காரணம் காட்டி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் ஜோதிபாசு.

முதலமைச்சர் பதவியில் இருந்து ஜோதிபாசு ஒதுங்கியபின் பொதுவுடமை கட்சிக்கும் பின்னடைவு தான். 2004 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்றபோதும், பல்வேறு சிங்குர், மாவோயிஸ்ட் போராட்டம் என பல்வேறு சர்ச்சைகள் சிக்கிக்கொண்டன. 2009 மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சிக்கு பெருத்த பின்னடைவு.

பொதுவுடமை கட்சி கோலோச்சிய அதே களத்தி்ல் (மேற்கு வங்கத்தில்), அக் கட்சியின் வீழ்ச்சியையும் காணக்கூடிய துர்பாக்கிய நிலை ஜோதிபாசுக்கு ஏற்பட்டது கொடுமையிலும், கொடுமை. ஜோதிபாசு உயிருடன் இருக்கும்போதே மேற்கு வங்கத்தில் பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படவில்லை என்பது தோழர்களின் மனதுக்கு சற்று ஆறுதலான விஷயம்.


ஜோதிபாசுவின் இளமை பருவம்


மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் ஓர் நடுத்தர குடும்பத்தில் 8-7-1914-ல் ஜோதிபாசு பிறந்தார். அவருக்கு ஜோதிரிந்தர பாசு என அவரது பெற்றோர் பெயரிட்டனர். அவரது தந்தை நிஷிகாந்த பாசு (தற்போது பங்களாதேசத்தில்) உள்ள கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்கா மாவட்டத்தில் பரோடி கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் ஹேமலதா பாசு இல்லத்தரசியாக இருந்தார்.

பள்ளிக்கல்வியை 1920 ஆம் ஆண்டு கோல்கத்தா தர்மதாலாவிலுள்ள லோரேட்டோ பள்ளியில் துவக்கினார். .பள்ளியில் சேர்க்கும்போதுதான் அவரது தந்தை அவர் பெயரை ஜோதிபாசு என மாற்றினார். 1925ஆம் ஆண்டு புனித சேவியர் பள்ளிக்கு மாறினார் ஜோதிபாசு. 1935-ம் ஆண்டில் இந்து கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார்.


பொதுவுடமை கட்சியில் நெருக்கம்

அடுத்து சட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு பிரித்தானிய பொதுவுடமைக் கட்சி மூலம் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டார். 1940ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக மிடில் டெம்பிள் சட்டரங்கில் பதிந்து கொண்டார். அந்த ஆண்டே இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தொடருந்து தொழிலாளர் சங்க பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் தமது சட்டப்படிப்பின்போதே சமூக அமைப்புகளிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட பாசு இந்தியா திரும்பியதும் இடதுசாரி அரசியலில் பங்கெடுக்கும் தமது எண்ணத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.அவர்களது பலத்த எதிர்ப்புகளுக்கிடையேயும் பிரித்தானிய இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போதிலும் தமது குறிக்கோளிடமிருந்து மாறவில்லை.

அரசியல் வாழ்க்கை

1946ஆம் ஆண்டு வங்காள சட்டமன்றத்திற்கு தொடருந்து தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு இந்திய பொதுவுடமைக் கட்சி பிளவுபட்டபோது புதிதாக துவக்கப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழுவில் (பொலிட்பீரோ) முதல் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார்.

முதல் அரசியல்தலைமைக்குழுவில் அப்போதைய கட்சியின் பொதுச்செயலர் பி.சுந்தரய்யா, பி.டி.ராணாதேவ், பிரமோத் தாஸ் குப்தா, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், எம்.பசவபுன்னையா, ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். முதல் தலைமைக்குழுக் கூட்டம் கோவையில் தான் நடைபெற்றது.




முதல் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுடன் ஜோதிபாசு: நன்றி-கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி


பின்னர் கொச்சி (1968), மதுரை (1972), ஜலந்தர் (1978), விஜயவாடா (1982), கோல்கத்தா (1985), ஹைதராபாத் (2002), தில்லி (2005) ஆகிய நகரங்களில் நடைபெற்ற அரசியல்தலைமைக்குழுக்களில் ஜோதிபாசு இடம்பெற்றிருந்தார். கடைசியாக கோவையில் 2008-ல் நடைபெற்ற அரசியல்தலைமைக்குழுக் கூட்டத்தில் உடல்நலம் காரணமாக பங்கேற்கவில்லை.

அவசர நிலை:

1967 மற்றும் 1969 ஆண்டுகளில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 1975 இல், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவெங்கும் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டது, பொதுவுடமைவாதிகள் வேட்டையாடப்பட்டார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரம் முன்னணி பொதுவுடமை ஊழியர்களை இந்தியா இழந்தது, அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோரை மேற்கு வங்க மாநிலம் இழந்தது. இருப்பினும் அஞ்சாமல் செயல்பட்ட ஜோதிபாசு உள்ளிட்ட பொதுவுடமை தலைவர்கள், மக்களின் ஆதரவை வென்றெடுத்தார்கள்.

இடது முன்னணி:

அதனைத் தொடர்ந்து 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணி பெரும்பான்மை பெற்றது. 21-61977 முதல் 6-11-2000 வரை தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

அந்த அரசு நிலச் சீர்திருத்ததை அமல்படுத்தியது. சுதந்திரத்திற்கு முன்பாக நில உடமை என்பது அரசர்களைச் சார்ந்ததாக இருந்தது. பெரும்பாலான நிலங்கள் பெரிய ஜமீந்தார்களிடமும், அரச பரம்பரையின் கடைக்கண் பார்வை பெற்றவர்களிடமும் இருந்தது. மிக முக்கியச் சொத்தான நிலம் இவ்வாறு சிறு பகுதியினரின் கீழ் இருந்ததை மாற்றி. உழைக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. மேலும், பொது வினியோக முறை, கல்வி, பொது சுகாதாரம் பேணுதல் எனப் பலவிசயங்களிலும் அந்த அரசு சிறப்பாக செயல்பட்டது.

2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு பதவியிலிருந்து விலகினார். அவரது நம்பிக்கைக்குரிய புத்ததேவ் பட்டாசார்யா அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஜோதிபாசுவின் கனவுகளை நிறைவேற்றுவதும், சரிந்து கிடக்கும் பொதுவுடமை கட்சி செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்துவதும் தான் அவருக்கு தோழர்கள் செய்யும் கைமாறு. அவரது இழப்பு பொதுவுடமை கட்சிக்கு மட்டுமன்றி நாட்டுக்கும் பேரிழப்பு.

முதுபெரும் தோழர் ஜோதிபாசுக்கு மீண்டும் ஒருமுறை சிவப்பு வணக்கம்!!!!!!..


தோழமையுடன் நெல்லை பொடியன்

கறுப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?

Thursday, January 14, 2010




தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என தமிழகத்தின் வீதியெங்கும் முழங்கி வந்த விஜயகாந்த், ஒத்தக் கருத்துடைய கட்சியுடன் கூட்டணிக்கு தயார் என அந்தர் பல்டி அடித்துவிட்டார். 21-ம் நூற்றாண்டில் பிற துறைகளில் ஏற்பட்டதுபோல அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (பணம் இருந்தால் அரசியல் செய்ய முடியும் என்பதை தாங்க இப்படி நாசுக்காக சொல்கிறோம்), கட்சி துவக்கிய 5 ஆண்டுகளில் கிடைத்த பழுத்த அனுபவங்கள் உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களால் விஜயகாந்த் பல்டி அடித்திருக்கலாம்.



தமிழகத்தில் மாறிமாறி வரும் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்ற வீர வசனத்துடன், 2005ல் தே.மு.தி.க., வை துவக்கினார் விஜயகாந்த். கேப்டன் என தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அடைமொழியை பயன்படுத்தி, கிராமங்களில் செழித்துவளர்ந்த எம்.ஜி.ஆர் வாக்குவங்கியை அறுவடை செய்தார் விஜயகாந்த்.

எட்டு மாத குழந்தை பருவத்திலேயே 2006-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலை கூட்டணியின்றி சந்தித்தது தேமுதிக கட்சி. பாமகவின் கோட்டையான விருத்தாச்சலம் தொகுதியில் (ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள தொகுதி) துணிச்சலுடன் நின்று சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று பாமகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜயகாந்த். பிற தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர்களில் 99 சதவீதத்தினர் 3-வது இடத்தை பிடித்தனர்.

பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி தேமுதிக பெற்ற வாக்குகளால் மாறிப்போனது. தமிழக அரசியலில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை உருவானது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு வியப்பளிக்கும் வகையில் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக.

திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரியகட்சி தேமுதிக தான் என ஜனநாயக ரீதியாக நிரூபித்தது அக் கட்சியின் வாக்குவங்கி. பொதுத்தேர்தல் முடிந்த ஆறு மாதங்களில், சபாநாயகர் பழனிவேல்ராஜன் மறைவால், மதுரை மத்தியத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை விட 2,515 ஓட்டு மட்டுமே குறைவாக பெற்று மூன்றாவது இடத்தை தே.மு.தி.க., பிடித்தது. பொதுத்தேர்தலில் 8.38 சதவீதமாக இருந்த தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, இத் தேர்தலில் 19.13 சதவீதமாக உயர்ந்தது.



இதைத் தொடர்ந்து, எட்டு மாத இடைவெளியில், மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தே.மு.தி.க., சந்தித்தது. இந்த தேர்தலில் 18 சதவீத ஓட்டுகளைப் பெற்று தனது பலத்தை வெளிப்படுத்தியது. இந்த இரு தேர்தல்களிலும், தே.மு.தி.க.,விற்கு மக்கள் வழங்கிய ஆதரவு, அ.தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தி.மு.க., வுக்கு மாற்று சக்தியாக தேமுதிக என மக்கள் அங்கீகரித்து விட்டனர் என்பதோடு, 2011ம் ஆண்டில் கேப்டன் ஆட்சி தான் என்ற முரசு கொட்டினர் தேமுதிக தொண்டர்கள்.

தேமுதிகவின் வாக்கு வங்கியை கண்டு புருவம் உயர்த்திய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மக்களவைத் தேர்தலின்போது விஜயகாந்துடன் ரகசிய பேச்சு நடத்தின. 7 சீட், 600 கோடி ரூபாய் வேண்டும் என காங்கிரஸ் கட்சியுடன் பேரம் பேசியதாகவும், ஆனால், 5 சீட், ரூ.250 கோடி தருவதாக காங்கிரஸ் ஒத்துக்கொண்டதாகவும் தேமுதிக மீது விமர்சனம் எழுந்தது.

இருப்பினும் தனித்தே களம் இறங்கிய தேமுதிக, மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், அடுத்து வந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேமுதிகவுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றன.

தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தே.மு.தி.க., பக்கம் ஓரளவு சாய்ந்தது. தே.மு.தி.க.,வின் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, சமீபத்திய இடைத்தேர்தலில் மாயமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு 17 ஆயிரத்து 57 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், தற்போதைய இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 7,063 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதே போல், கடந்த மக்களவைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் 9,712 ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க., தற்போதைய இடைத் தேர்தலில் வெறும் 4,186 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.


கரடு, முரடாண அரசியல் பாதையில் தனித்து செல்வது விஜயகாந்துக்கு பிடிக்கலாம். அவரது மனஉறுதி அப்படி. ஆனால், கட்சித் தொண்டர்கள் எத்தனைநாள்தான் கரடு, முரடாண பாதையில் அவருடன் பின்தொடர்ந்து வருவார்கள். எனவே, இதே பாதையில் பயணித்தால் அரசியலில் கரையேற முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் விஜயகாந்த்.

இத்தகைய நெருக்கடியான நிலையில் தான் கூட்டணிக்கு தயார் என திமுக, அதிமுகவின் பார்முலாவுக்கு மாறிவிட்டார் விஜயகாந்த். கரடு முரடாண பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் பயணம் செய்ய காத்திருக்கிறார் விஜயகாந்த். அந்த பாதை போயஸ் தோட்டம் (அதிமுக) வழியாக செல்கிறதா?, கோபாலபுரம் (திமுக) வழியாக செல்கிறதா? அல்லது சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ்) வழியாக செல்கிறதா? என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போயஸ் தோட்டம் நோக்கி பயணித்து அம்மா பிள்ளையாக மாறிவிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர் விஜயகாந்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல்நோக்கர்கள். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது
கருப்பு எம்.ஜி.ஆரின் பாதை வெளிச்சமாகிவிடும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கலைஞரின் கள்ளக் கணக்கும்!

Thursday, January 7, 2010




தினமணியின் தலையங்கபக்க துணை கட்டுரையில் 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கணையுடன் கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் (19-9-2009) உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடத்தப்படும் என முதலமைச்சர் கலைஞர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஈழத்தில் தமிழர்கள் பரிதாப நிலையில் இருக்கும்போது உலகத் தமிழ் மாநாடு நடத்தலாமா? என்ற ஆதங்கம் தமிழ் அறிஞர்களுக்கு. ஆனால், உடன்பிறப்புகளுக்கும், கதர்சட்டைகளுக்கும் முகத்தில் பொங்கி வழிந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை.

கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்காலத்தை (சட்டப்பேரவை தேர்தலை) கணக்கு போட்டு வழக்கம்போல கலைஞர் காய்நகர்த்துகிறார் என்ற கிசுகிசுப்பு கிளம்பியது. உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம் உரிய அனுமதி வழங்காததால், உலகத் தமிழ் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக 29-9.2009-ல் மாற்றி அறிவிக்கப்பட்டது.

ஜனவரியில் நடத்தப்பட இருந்த மாநாடு, ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூனில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தநாள் முதல் இதுவரை இது தொடர்பாக ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.

மகனுக்கு (மு.க.ஸ்டாலின்) பொறுப்பு, மகளுக்கு (கனிமொழி) பொறுப்பு, பேரனுக்கு (கலாநிதி மாறன்) பொறுப்பு, வளர்ப்பு மகளின் கணவருக்கு பொறுப்பு (சரத்குமார்-ராதிகாவை கலைஞர் மகள் என அழைப்து வழக்கம்), நண்பர்களுக்கு பொறுப்பு, எதிரிகளுக்கும் பொறுப்பு என தினமும் ஏதாவது ஒரு குழுவையும், குழு உறுப்பினர்களையும் அறிவித்து வருகிறார் கலைஞர்.

இது அவரது சொந்த விருப்பம் அல்லது முதலமைச்சர் என்ற முறையில் அவர் வெளியிடும் அறிவிப்பாக இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் கலைஞர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அந்த அறிக்கையி்ன் விவரம்:
கோவையில் உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் மாநாட்டையொட்டி கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நகர ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் திட்டத்தின்கீழ் கோவை உக்கடத்தில் ரூ.68 கோடி செலவில் 2 ஆயிரத்து 232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அம்மன்குளத்தில் ரூ.50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கும் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதுதான் அறிக்கையின் சுருக்கம்.

இதை கோவைவாசிகள் (மாநகராட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லது மாநகராட்சி தொடர்பான செய்திகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள்) தவிர, பிற மாவட்ட மக்களோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ வாசித்தால் ஆகா கோவைவாசிகள் கொடுத்துவைத்தவர்கள். உலகத் தமிழ் மாநாடு நடப்பதால் கோடிக்கணக்கான நிதி கிடைக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின்றன. குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலைகள் விரிவாக்கம் கோவை நகரமே சொர்க்கம் போல மாறிவிடும் என எண்ணத் தோன்றும்.

இதை உன்னிப்பாக ஆழமாக பார்த்தால் கலைஞரின் கள்ளக்கணக்கு அல்லது கலைஞர் அரசு அதிகாரிகளின் கள்ளக்கணக்கு வெட்டவெளிச்சமாகும்.

ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் கலைஞர் அரசின் திட்டம் அல்ல. இது மத்திய அரசின் கனவுத் திட்டம். ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 1998-ம் ஆண்டு முதல் இத் திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை மாநகராட்சிகளிலும், பிற மாநிலங்களில் முக்கியமான மாநகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீடு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை இத் திட்டத்துக்கு 50 சதவீத நிதியை ஒதுக்குவது மத்திய அரசு. மாநில அரசின் பங்கு 20 சதவீதம். மீதமுள்ள 30 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. கலைஞர் ரூ.118 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்துள்ள அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஓராண்டுக்கு முன்பாகவும் (7-9-2008), உக்கடத்தில் கடந்த மே மாதத்திலும் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இப்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.




அம்மன்குளத்தில் 7.9.2008-ல் பூமி பூஜையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, சுப.தங்கவேலன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்


உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் (கலைஞர் அறிவித்த ஒரே வாரத்துக்குள் முளைத்துவிட்டது போலும்)

ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிசை வாரியம் இந்த வீடுகளை கட்டி வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு நிதி ஒதுக்கியதாக எப்படி கணக்கு காட்டுகிறார் கலைஞர்?.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம். குடியிருப்புகள் கட்டத் துவங்கியது ஓராண்டுக்கு முன்பு. மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது நியாயமா கலைஞரே?. மாநாடு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கான நிதியையும் கணக்கு காட்டுவது எதற்காக?. புகழுக்காகவா? பெருமைக்காகவா? கள்ளக்கணக்கு காட்டவா?

உலகத் தமிழ் மாநாட்டையொட்டி உருப்படியான திட்டங்களை அறிவிக்க வேண்டுமெனில் கிடப்பில் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து அதிகமான இடங்களில் சிங்கார சென்னைபோல அழகான மேம்பாலங்கள் (தேவை 10, குறைந்தபட்சம் 5), அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டியது தானே?.

அவற்றையெல்லாம் அறிவித்தால் கலைஞரின் குட்டு தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்துவிடும். அதனால்தான், கண்ணாம்மூச்சு காட்டும் திட்டங்களை மட்டும் அறிவித்திருக்கிறார் கலைஞர்.

கோவை சிறையில் உலகத் தரத்துக்கு இணையான தாவரவியல் பூங்கா அமைக்கும் மற்றொரு மெகா மோசடி திட்டத்தையும் அறிவித்துள்ளார் கலைஞர். இப்போது இருக்கும் சிறையை மாற்ற சில காலம் பிடிக்குமாம் (10 ஆண்டுகளோ அல்லது 100 ஆண்டுகளோ தெரியவில்லை). பாதுகாப்பான இடம் வேறு இல்லை என்பது அடுத்த பிரச்னை. கட்டடம் இருக்கும் இடத்தை தவிர காலியாக இருக்கும் 93 ஏக்கரில் (மொத்த பரப்பு 165 ஏக்கர்) தாவரவியல் பூங்காவாம்.

உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் சிறை வளாகத்தில் அமைக்கப்படும் தாவரவியல் பூங்காவை எப்படி போய் பார்ப்பது? எப்போது சிறை வேறு இடத்துக்கு மாற்றப்படும்? தாவரவியல் பூங்கா மக்கள் பார்வைக்கு எப்போது திறந்துவிடப்படும்? அத்தைக்கு மீசை எப்போது முளைக்கும்? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்க வேண்டியது தான்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக திட்டங்களை, அதிமுகவும், அதிமுக திட்டங்களை, திமுகவும் தொடராது என்பது எழுத்தப்படாத அரசியல் கோட்பாடு. ஒருவேளை அதிமுக ஆட்சி வந்துவிட்டால், கோவை சிறையில் தாவரவியல் பூங்கா என்பது பகல்கனவாகிவிடும்.

உருப்படியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழர்களையும், கோவைவாசிகளையும் திருப்திபடுத்துவதற்கு பதில், கள்ளக் கணக்கு, கானல் நீர் போன்ற திட்டங்களை அறிவித்து கலைஞர் குழம்ப வேண்டாம். தமிழர்களையும் குழப்பவும் வேண்டாம். ஏமாற்றவும் வேண்டாம்.

இப்படிக்கு கலைஞரின் தம்பி....

நெல்லை பொடியன்