சிதம்பரத்தின் முகமூடியை கிழித்த சி.பி.ஐ.

Wednesday, February 10, 2010


ப.சிதம்பரம்


சி.பி.ஐ.இயக்குநர் அஸ்வின் குமார்

தமிழீழ விடுதலைப்புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? என்ற குழப்பத்தில் இருப்பது இலங்கை அரசு மட்டுமல்ல. இந்திய அரசும் தான். உள்மனதுக்குள் குழப்பம் இருந்தாலும், உண்மை தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப நினைக்கிறது இரு நாட்டு அரசுகள்.

பிரபாகரன் பற்றி தொடர்ந்து பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் வந்துவிட்டது திருவாய் மலர்ந்து புழுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

தில்லியில் ஒருவாரத்துக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிஐ உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என்றார். இதை அடுத்த நாளே மறுத்த அமைச்சர் சிதம்பரம், பிரபாகரன் சான்றிதழ் வந்துவிட்டது தனக்கே உரிய பாணியில் அமைதியாக அழுத்தம் திருத்தமாக கூறினார்.

ஆனால், சிதம்பரம் கூறியது பச்சை பொய் என தோலுரித்து காண்பித்துவிட்டார் சி.பி.ஐ.
இயக்குநர் அஸ்வின் குமார். பிரபாகரன் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என பிப்.9-ம் தேதி உறுதிப்பட கூறி சிதம்பரத்தின் முகமூடியை கிழித்துவிட்டார்.

பிரபாகரனின் மரணச் சான்றிதழ் வந்தால் சி.பி.ஐ.க்கு தெரியாமல் இருக்காது. சி.பி.ஐ.-க்கு தெரியாமல் சான்றிதழ் வந்துவிட்டது. ஒருவேளை இலங்கை அதிபர் ராஜபக்ஷ
சிதம்பரத்திடம் ரகசியமாக கொடுத்துவிட்டாரா? கொடுத்த சான்றிதழை சிதம்பரம் தனது வீட்டு பரணில் பாதுகாப்பாக வைத்துள்ளாரா?.

இந்திய அரசின் அமைச்சரவையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் மூத்த அமைச்சர்
தவறான தகவலை தெரிவிக்கலாமா?. இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உறுதிபடுத்தவும் முடியவில்லை.