களைச் செடியாகும் கற்பகத்தருக்கள்

Tuesday, February 23, 2010

23.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
இந்து புராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,​​ ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு.​ தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் ​ கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.​ நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,​​ முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,​​ வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.​ இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.​ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,​​ இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.​ பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.​ இதன் உச்சியில்,​​ கிட்டத்தட்ட 30 -​ 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.​ ​​ ஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது.​ இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.​ அரசும்,​​ மக்களும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.​ ஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.​ இந்தியாவில்,​​ கேரளம்,​​ கோவா,​​ மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள்,​​ தமிழகத்தில் கன்னியாகுமரி,​​ திருநெல்வேலி,​​ மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.​ ​ இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.​ 1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம்.​ அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும்,​​ நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது.​ ​ உள்நாட்டுப் போரினால் மட்டும்,​​ 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.​ அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,​​ 30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.​ இலங்கையில் இருந்து பதனீர்,​​ கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.​ இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.÷தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.​ பதநீர் விற்பனையை அதிகரித்து,​​ அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.​ ​​ ​ பனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு,​​ நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் ​ பனையிலிருந்து பெற முடியும்.​ பொதுவாக,​​ இது வளரும் இடங்களில் எல்லாம்,​​ வசதியற்ற ஏழை மக்களின் ​பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.÷பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர்,​​ பனை வெல்லம் -​ 25 கிலோ,​​ பனங்கற்கண்டு -​ 16 கிலோ,​​ தும்பு -​ 11.4 கிலோ,​​ ஈக்கு -​ 2.25 கிலோ,​​ விறகு -​ 10 கிலோ,​​ ஓலை -​ 10 கிலோ,​​ நார்-​ 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.​ ​ பனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,​​ விலங்குகளின் உணவும் அடங்கும்.​ கட்டடப் பொருள்கள்,​​ அலங்காரப் பொருள்கள்,​​ வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.​ ​ முற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.​ இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்.​ அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து,​​ ஜெர்மனி,​​ பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.​ ​​ ​ அச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள்,​​ தொல்காப்பியம்,​​ சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.​ ​​ ​ இதுபோல தமிழுக்கும்,​​ தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்.​ தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,​​ தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.​ ​ ​ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ​(குறிப்பாக தென்மாவட்டங்களில்)​ பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்,​​ பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.​ ​அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.​ இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.​ ​ 21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.​ எனவே,​​ பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,​​ வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.​ ​ மாநில மரம் என்ற வகையிலும்,​​ தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற ​ வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம்.​ ​​ ​ பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் ​ கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது,​​ பனையில் இருந்து ​ கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம்.​ பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.


நன்றி: தினமணி

தமிழனுக்கு பாடம் எடுத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

Saturday, February 20, 2010


நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது மெத்தப்படித்த சில மேதாவி தமிழர்களின் வழக்கமான செயல். அதிலும் சில கோமாளிகள் தங்கிழிஷில் (தமிழ், ஆங்கிலம் கலந்து) பேசி தன்னையும் ஏமாற்றி, பிறரையும் ஏமாற்றுவது இயல்பு. கோவையில் ஒரு அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றது.
மத்திய அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் சார்பில் குளோனிங் மரக்கன்றுகள் வெளியிடும் நிகழ்ச்சி கோவை வனக்கல்லூரி வளாகத்தில் 18.2.2010-ல் நடைபெற்றது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் ஜி.குமாரவேலு, சற்று சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். இதைப்பார்த்த ஜெய்ராம் ரமேஷ், குமாரவேலு தமிழில் பேசுங்கோ எனக்கு புரியம் என்றார்.
இருப்பினும் குமாரவேலு, தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்தார். குமாரவேலுவின் ஆங்கில பேச்சை ஜெய்ராம் ரமேஷால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், தமிழ் பேச்சை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. அமைச்சரின் தலைஅசைப்பு, முகபாவணையில் இருந்து இதை தெளிவாக அறிய முடிந்தது.
சிறப்புவிருந்தினருக்கும் புரியாமல், கூடியிருந்த தமிழ் விவசாயிகளுக்கும் புரியாமல் இதுபோல தங்கிழிஷில் பேசும் தமிழ் கோமாளிகளை என்ன செய்ய? என்ற நியாயமான கேள்விக்கணை கூடியிருந்த விவசாயிகளின் மனதில் இருந்து வெளிவந்ததை காண முடிந்தது.

லட்சம் பேருக்கு விருந்து!

Monday, February 15, 2010

தினமணி கதிரில் 14.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்


திருவிழா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் உண்டாகும்.

அதிலும் நாடு முழுவதும் பரவியிருக்கும் கிராமவாசிகள் ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் கூடி திருவிழா கொண்டாடினால் எப்படி இருக்கும்? நேரடியாக சென்று பார்த்தால், அனுபவித்தால் தான் அந்த சந்தோஷத்தை உணர முடியும்.


அப்படிப்பட்ட ஆச்சரியமளிக்கும் திருவிழா நடப்பது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மெய்ஞ்ஞானபுரம் கிராமத்தில்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அசனத் திருவிழா பிரசித்தி பெற்றது. மெய்ஞ்ஞானபுரத்தில் உள்ள பரி. பவுலின் ஆலயத்தில் 163 ஆண்டுகளாக இத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு கடிதம் விலை ரூ.15,000



பத்திரிகையாளனாக இருப்பதால் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் அடிக்கடி சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது ஆளும்கட்சி செய்யும் சில தவறுகளை எதிர்கட்சி நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டுவேன்.

ஒரு வாரத்துக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவரை சந்தித்து நீண்டநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவரிடம், கோவை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்களுக்கு எதிரான முடிவுகளை மாநகராட்சி எடுக்கும்போது, அதிமுக கவுன்சிலர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. மாநகராட்சியில் தான் இப்படி என்றால், கோவை மாவட்டத்திலும் இதுபோல இதுபோல பல மக்கள்விரோத பிரச்னைகள் நடைபெறுகின்றன. இப் பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தினால் அதிமுகவுக்கு ஆதரவு கூடுமே?. உங்கள் மாவட்டச் செயலர் செ.ம.வேலுச்சாமி எம்.எல்.ஏ.விடம் இதுபற்றி பேசக்கூடாதா? என வினவினேன்.

என்ன சார் நீங்க. மாவட்டச் செயலரிடம் பலமுறை பல பிரச்னைகளை கூறிவிட்டோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடையொட்டி சுமார் 3,000 வீடுகள் ஏழைகளுக்கு கட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது என கருணாநிதி பொய் தகவல் கூறும்போதுகூட செ.ம.வேலுச்சாமியிடம் கூறினேன். அம்மாவிடம் (ஜெயலலிதா) தகவல் தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தலாம் என்றேன். அவரோ கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை.

சரி கட்சியில் மூத்த உறுப்பினராக இருக்கும் நீங்களாவது இதை உங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கக்கூடாதா? என்றதும் அவரிடம் இருந்த வந்த பதிலை கண்டு எனக்கே சற்று அதிர்ச்சி ஏற்பட்டது.

இதோ அவரது பதில் இதுதான்: கடிதம் அனுப்பலாம். புகார் அனுப்பலாம். ஆனால் அது அம்மா பார்வைக்கு நிச்சயம் போகாது. அவருக்கு செல்வதற்கு முன்பே செ.ம.வேலுச்சாமிக்கு தகவல் வந்துவிடும், உங்கள மாவட்டத்தில் இருந்து புகார் கடிதம் வந்துள்ளது என்று. அடுத்து என்ன; அடுத்தமுறை சென்னைக்குச் சென்றதும் ரூ.15,000 கொடுத்தால் போதும் கடிதம் செ.ம.வேலுச்சாமியின் கைக்கு வந்துவிடும்.

கோவை மாவட்டச் செயலர் மட்டும் தான் இதுபோன்ற சாமர்த்தியவாதி என நீங்கள் எண்ணிவிட வேண்டாம். இதுபோல வரும் புகார் கடிதங்களை வைத்தே மாதத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யும் கும்பல் போயஸ் தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. பின்ன எப்படி சார் அதிமுக ஆட்சிக்கு வர முடியும். இதெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருக்கும் எங்களை போன்ற தொண்டனின் உள்ளக் குமுறல் சார்.


என் பெயர் வெளியில் வராத வகையில் எப்படியாவது இதை வெளிப்படுத்துங்க சார்ன்னு சொன்னார் அந்த கள்ளம் கபடு இல்லா அதிமுக தொண்டர். என்ன பண்ணுறது இருக்கவே இருக்கு. நம்ம வலைப்பதிவு. தாய்த் தமிழக அரசியல் எப்படி இருக்கு பாத்திங்களா உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் சொந்தங்களே?.

உள்கட்சிக்குள் இருக்கும் பிரச்னைக்கே தீர்வுகாண முடியாமல் தவிக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களால், உலகில் பல நாடுகளில் வசிக்கும் தமிழ்ச் சொந்தங்களின் பிரச்னைகளுக்கு எப்படிங்க தீர்வுகாண முடியும்?.

மலேசியாவின் ராஜபக்ஷ நஜீப் டன் ரசாக்

Thursday, February 11, 2010


மலேசிய பிரதமர்


வசந்தகுமார் கிருஷ்ணன்


கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்
மலேசிய நாட்டின் இந்து உரிமை நடவடிக்கை குழு (இன்ட்ராப்) தலைவரும், மலேசிய இந்தியன் குரல் அமைப்பின் ஆலோசகருமான வசந்தகுமார் கிருஷ்ணன் பங்கேற்றார்.

2 ஆண்டுகள் சிறையிலும் பின்னர் வீட்டுக்காவலிலும் இருந்த அவர், முதல்முறையாக வெளிநாட்டு பயணமாக கோவைக்கு வந்திருந்தார். சிறைவாசத்துக்குப்பின் தான் பங்கேற்கும் முதல் மாநாடு தமிழர் பாதுகாப்பு மாநாடு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இனி அவரின் நேர்முகம்:

கேள்வி: இன்ட்ராப் இயக்கம் தோன்றியது ஏன்?

பதில்: மலேசிய நாட்டில் இந்து கோயில்கள் குறிப்பாக தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்ட வருகிறது. இதை தடுக்கவே இன்ட்ராப் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

கேள்வி: மலேசியாவில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது?

பதில்: தமிழர்களின் வளர்ச்சியை மலேசிய அம்னோ கூட்டணி அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியை தடுத்துவிடலாம் என எண்ணி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களுக்கு மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.

கேள்வி: தமிழை குறிவைத்து தடைபோடுதற்கான காரணம் என்ன?.
பதில்: தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவி்ட்டால், அரசியல் ரீதியாக தமிழர்கள் அதிகாரத்துக்கு வருதவதை தடுத்துவிடலாம் என சூழ்ச்சியுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.

கேள்வி: மலேசிய அரசியல் சாசனங்களில் தமிழர்கள் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: மலேசிய அரசியல் சாசன சட்டம் பிரிவு 8-ன்படி மலாய், சீனர், இந்தியர்கள் என அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பிரிவு 12-ன்படி கல்வியில் மூன்று மொழிகளுக்கும் (மலாய், சீனம், தமிழ்) சமஉரிமை
வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் மதிக்காமல் தமிழர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறது மலேசிய அரசு.

இதுதாங்க 8-வது உலக அதிசயம்!!!


கவிதையை வெளியிட்ட புலவர் பட்டணம் பழநிச்சாமி



கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை இது. உலகம் முழுவதும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காக இதை வெளியிடுகிறேன்.


தமிழகம் உள்ள தமிழர்கள் எல்லாம் தமிழய்ப் படித்தல் அதிசயம்
தமிழகக் கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனய் அதிசயம்
தமிழக வழக்கு மன்றங் களிலே தமிழில் புழங்கல் அதிசயம்
தமிழில் பெயருடன் தலய்முன் எழுத்தும் தமிழ்க்கய் எழுத்தும் அதிசயம்

தமிழர் இருவர் சந்தித் தாலே தனித்தமிழ் பேசுதல் அதிசயம்
தமிழர் குழந்தய் பெற்றோர் கூப்பிடல் அம்மா அப்பா அதிசயம்
தமிழர் குழந்தய்ப் பெயர்கள் எல்லாம் தமிழில் சூட்டல் அதிசயம்
தமிழர் சிறப்பணி உருமால் கட்டல் தமிழ் நாட்டினிலே அதிசயம்

தமிழ்நில முல்லய் சாமய்கொள்ளு சமயல் காண்பது அதிசயம்
தமிழர் கும்மி பிம்பிலி ஆட்டம் தமிழகம் நடப்பது அதிசயம்
தமிழர் கும்பிடும் வணக்கம் வாழ்த்து தகுதியில் புழங்கல் அதிசயம்
தமிழே இன்னும் இருபது ஆண்டில் ஆட்சியில் இருந்தால் அதிசயம்

தமிழகம் அதிகம் படித்திட்ட பேர்கள் தங்குதல் இங்கே அதிசயம்
தமிழகச் செல்வர் அடிக்கடி வெளிநாடு தாவாமல் இருந்தால் அதிசயம்
தமிழகப் பொதுநலப் பிரச்சினய் ஒற்றுமய் தாங்கிப்பழகல் அதிசயம்
தமிழக உறவுகள் சச்சர வின்றி சமமாய் வாழ்தல் அதிசயம்

தமிழய்த் தாழ்த்தும் ஆங்கில வருடிகள் தமிழாய் தழய்த்தல் அதிசயம்
தமிழே மூச்சு என்போர் எல்லாம் மக்கள் தமிழ்ப் பள்ளி சேர்த்தல் அதிசயம்
தமிழில் தனித்துவம் கொண்டவர் செயலப் தகவில் ஆய்தல் அதிசயம்
தமிழ்ப் போராளி என்கிற பேரும் ழகரம் ஒலித்தல் அதிசயம்

தமிழுக்காக உயிர்கொடுத்தோரின் சமாதி வணக்கம் போதாது
தமிழர் என்போர் எழுச்சியும் கொண்டு முன்னோர் பெருமய் எண்ணுங்கள்
தமிழின் வீழ்ச்சி ஏற்படும் போதில் தமிழா வாழ்ந்து என்ன பயன்?
தமிழுணர்வில்லாத் தடிமாடுகளே தற்கொலய் செய்து தொலையுங்களேன்!


படைப்பை ஆக்கியோன்: அருள்நிதிப் புலவர் பட்டணம் பழநிச்சாமி
வளர்கோகுலம் இல்லம்,
கோவய்-25,
தமிழ்நாடு,
இந்தியா,
செல்போன்-9363266820


(குறிப்பு) இவரது படைப்புகள் தொடர்ந்து எனது வலைப்பதிவில் வெளியாகும்

சிதம்பரத்தின் முகமூடியை கிழித்த சி.பி.ஐ.

Wednesday, February 10, 2010


ப.சிதம்பரம்


சி.பி.ஐ.இயக்குநர் அஸ்வின் குமார்

தமிழீழ விடுதலைப்புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? என்ற குழப்பத்தில் இருப்பது இலங்கை அரசு மட்டுமல்ல. இந்திய அரசும் தான். உள்மனதுக்குள் குழப்பம் இருந்தாலும், உண்மை தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப நினைக்கிறது இரு நாட்டு அரசுகள்.

பிரபாகரன் பற்றி தொடர்ந்து பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் வந்துவிட்டது திருவாய் மலர்ந்து புழுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.

தில்லியில் ஒருவாரத்துக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிபிஐ உயர் அதிகாரி ஒருவர், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என்றார். இதை அடுத்த நாளே மறுத்த அமைச்சர் சிதம்பரம், பிரபாகரன் சான்றிதழ் வந்துவிட்டது தனக்கே உரிய பாணியில் அமைதியாக அழுத்தம் திருத்தமாக கூறினார்.

ஆனால், சிதம்பரம் கூறியது பச்சை பொய் என தோலுரித்து காண்பித்துவிட்டார் சி.பி.ஐ.
இயக்குநர் அஸ்வின் குமார். பிரபாகரன் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை என பிப்.9-ம் தேதி உறுதிப்பட கூறி சிதம்பரத்தின் முகமூடியை கிழித்துவிட்டார்.

பிரபாகரனின் மரணச் சான்றிதழ் வந்தால் சி.பி.ஐ.க்கு தெரியாமல் இருக்காது. சி.பி.ஐ.-க்கு தெரியாமல் சான்றிதழ் வந்துவிட்டது. ஒருவேளை இலங்கை அதிபர் ராஜபக்ஷ
சிதம்பரத்திடம் ரகசியமாக கொடுத்துவிட்டாரா? கொடுத்த சான்றிதழை சிதம்பரம் தனது வீட்டு பரணில் பாதுகாப்பாக வைத்துள்ளாரா?.

இந்திய அரசின் அமைச்சரவையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் மூத்த அமைச்சர்
தவறான தகவலை தெரிவிக்கலாமா?. இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உறுதிபடுத்தவும் முடியவில்லை.

தனி ஈழம் ஏன்?

Saturday, February 6, 2010



உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகிறார் மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசியர் இராமசாமி.



கோவையில் சனிக்கிழமை துவங்கிய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ நாடு அமைக்கும் குழுவின் உறுப்பினருமான பேராசியர் முனைவர் இராமசாமி ஆற்றிய உரை:



உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேணஅடிய அவசியம் வந்துள்ளது.

5 ஆண்டுக்குள் தனி ஈழம் அமையும்




மாநாட்டில் பேசுகிறார் புலவர் புலமைப்பித்தன்

தமிழ்நாட்டின் கோவை கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டை தமிழக அரசின் முன்னாள் அரசவை கவிஞர் புலமைப்பித்தன் துவக்கிவைத்து ஆற்றிய உரை:

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. நிதி திரட்டுவதற்காக கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எனது நண்பர் கலைஞர் கருணாநிதி நடத்துகிறார். ஆனால், நீதியை நிலைநாட்ட இங்கு மாநாடு நடக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீதிமன்ற படிகட்டுகளில் ஏறித்தான் இம்மாநாட்டுக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழியில் தந்தை செல்வா போராட்டம் நடத்தினார். இருப்பினும் தீர்வு கிடைக்காததால் ஆயுதப்புரட்சி ஏற்படுத்த வேண்டிய நிலை உருவானது. ஆயுதப்புரட்சியை துவக்கிவைத்ததற்கு நானும் ஒரு காரணமானவன்.

எம்.ஜி.ஆரிடம் பேசி தம்பிக்கு ரூ.2 கோடி வழங்கினோம். இந்த பணத்தில் ஆயுதம் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆயுதப் போராட்டத்துக்கு தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், முடிந்துவிட்டது என யாராவது கூறினால் அவர்கள் முட்டாள்கள். எந்த ஒரு சுதந்திர போராட்டத்துக்கும் பின்னடைவு ஏற்படுவது இயற்கையானது. ஆனால், அதில் இருந்து மீண்டு எழும்பும். அதுபோல தான் ஈழ விடுதலைப் போராட்டமும். இன்னும் 5 ஆண்டுகளில் ஈழத்தில் சுதந்திர கொடியேற்றப்படும். அந்நிகழ்ச்சியில் நானும் பங்கேற்பேன்.


இலங்கை ராணுவம் மட்டும் தனியாக விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தால் 30 நாட்களில் விடுதலைப்புலிகளால் வெற்றிப் பெற முடியும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ராணுவங்களுடன் இலங்கை ராணுவம் இணைந்து போரிட்டதால் தாற்காலிக பின்னடைவு ஏற்பட்டது.

இந்தியா தான் போரை முன்னின்று நடத்தியது என்பதற்கு பல ஆதாரங்களை கூற இயலும். என்.டி.டி.வி.யின் தலைமை நிருபர் நிதின் கோகலே எழுதியுள்ள புத்தகத்தில் பல சான்றுகளை காண்பித்துள்ளார். 2006-ம் ஆண்டில் 17 ஹெலிகாப்டர்கள், 2 போர் கப்பல்களை இலங்கை ராணுவத்தின் வண்ணம் பூசி இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்திய ராணுவம். இதுபோல பல தந்திரங்களை இந்திய ராணுவம் கையாண்டுள்ளது.


உலகில் 10 கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத்தில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. தமிழனுக்கென்று தனி நாடு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். 2008-ம் ஆண்டில் இலங்கை ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக எனது நண்பர் கருணாநிதி அறிவித்தார்.

அறிவித்தப்படி அவர் ராஜினாமா செய்திருந்தால் ஈழத்தில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதை தடுத்திருக்கலாம். அவர் ராஜினாமா செய்தால் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இலங்கை ராணுவத்துக்கு இந்திய உதவி கிடைத்திருக்காது.

மிகப்பெரிய களங்கத்துக்கு ஆளாகிவிட்டார் எனது நண்பர் கருணாநிதி. இந்த களங்கத்தை துடைக்க தான் கோவையில் உலத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துகிறார். கங்கையில் உள்ள அனைத்து நீரை வைத்து அவர் கைகழுவினாலும் களங்கத்தை துடைக்க இயலாது.

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் 2, 3, 4-ம் தர குடிமக்களாகத்தான் வாழ்கின்றனர். முதல்தர குடிமகனாக, தனிநாடு உடையவராக தமிழர்கள் வாழ்ந்தால் தான் தமிழனுக்கு பாதிப்பு ஏற்படும்போது தட்டிக்கேட்க முடியும். தமிழனுக்கென்று தனி நாடு ஈழத்தில் விரைவில் அமையும் என்றார்.

உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு இன்று துவக்கம்: இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இருவர் பங்கேற்பு

Friday, February 5, 2010



கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாநாடு அரங்கை பார்வையிடும் டாக்டர் க.கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள்


உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (6,7-02-2010) நடைபெறுகிறது. இதில் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இருவர் பங்கேற்கின்றனர்.

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகள் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றனர்.

கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த தமிழ் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

முதல்நாள் (6-02-2010) நிகழ்ச்சிகள்:

காலை 10 மணி தமிழர் எழுச்சி கொடியேற்றம்,
காலை 10.15 மணி வீர வணக்கம்,
காலை 10.30 மணி சுடர் ஏற்றுதல்,
காலை 10.45 மணி மாநாடு துவக்கம்.

வரவேற்புரை-பேராசிரியர் அருணா,
தலைமை-டாக்டர் க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சி நிறுவனர்),
முன்னிலை- தெ.சீ.சு.மணி,
மாநாடு திறப்பாளர்-பேராசிரியர் ப.ராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாகாணம், மலேசியா.

மாநாடு துவக்க உரை: புலவர் புலமைப்பித்தன்

பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை புகைப்பட கண்காட்சி.

முதல்அமர்வு: கவிஞர் இன்குலாப், கவிதா சரண், எழுத்தாளர் சூரியதீபன், பாமரன், குமரவேல், சுஜிதா, கோவை ஞானி.

2-ம் அமர்வு: கண்ணா (மலேசியா), குமணராசா (மும்பை), சிவகாமிதேவி (கோலாலம்பூர்), பேச்சிமுத்து (கேரளம்), குருமூர்த்தி, பழனி (பெங்களூர்).


இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (07-022010)

முதல்அமர்வு (காலை 10 முதல் பகல் 1.30 மணி வரை)

அய்யநாதன், புதுக்கோட்டை பாவணன், புகழேந்தி தங்கராசு, சுந்தரேசன், பேராசிரியர் சரசுவதி, அருளானந்தம்.

வாழ்த்துரை:
மனோ கணேசன், சுரேஷ்பிரேமச்சந்திரன் (இலங்கை தமிழ் எம்.பி.க்கள்).
தமிழருவிமணியன், ஓவியா, பழ.கருப்பையா (சிந்தனையாளர்க
ள்).

நிறைவுரை:

பினாங்கு துணை முதலமைச்சர் ப.ராமசாமி,
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
தோழர் தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலர்)

நன்றியுரை: வே.க.அய்யர்.

இந்தியாவின் இரண்டு முகங்கள்

05.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்




உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான்.​ அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான்.​ தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும்.​ உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை ​ யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது.​ அந்த அறிக்கையில்,​​ உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் ​(18 வயதுக்கு மேற்பட்டோர்)​ படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.​ அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும்,​​ 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர்.​ அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா,​​ பாகிஸ்தான்,​​ வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.​ இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால்,​​ இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது.​ ​ மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில்,​​ ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.​ இது அதைவிட கொடுமையான விஷயம்.​ ​ ​

சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும்,​​ இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.​ இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான்.​ கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும்,​​ அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் ​(1 முதல் 8-ம் வகுப்பு வரை)​ சேர்கின்றனர்.​ இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.​ சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.​ இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.​ அதேபோல,​​ கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும்,​​ ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.​ உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.​ இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர்.​ இது உலக சராசரியைவிட ​(23) மிகக் குறைவு.​ வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர்.​ வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.​ 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு,​​ எழுத்தறிவு சதவீதமும்,​​ உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை.​ கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.​ ​

விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்.​ உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது.​ ​ வளர்ந்த,​​ வளமான,​​ படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம்.​ ஏழ்மையான,​​ படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.​ ​

இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?​ இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல்,​​ குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம்.​ எனவே,​​ ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள்,​​ மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும்,​​ கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.​ கிராமங்களில் தரமான கல்வி,​​ மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.​ தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி,​​ கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்.​ அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும்.​ இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும்.​ ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.

நன்றி: தினமணி

சிதம்பரத்துக்கு சொரணை இருக்கா?

Thursday, February 4, 2010



புதுதில்லியில் 02-02-2010-ல் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தமிழையும், தமிழனையும் அவமானப்படுத்தும் வகையி்ல பேசியுள்ளார். தமிழை, தமிழனை, சக தமிழனே அவமதித்திருப்பது வெட்கக்கேடான செயல்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்களே என்று நிருபர் ஒருவர் தமிழில் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சிதம்பரம், தமிழில் கேள்வி கேட்கக் கூடாது. தமிழில் கேள்வி கேட்டால் இங்கே மற்றவர்களுக்கு புரியாது. ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என இருமாப்புடன் பேசியுள்ளார்.
அதேநேரத்தில் ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தனது தனது செயலரின் உதவியுடன் பதில் அளித்தார்.

ஹிந்தியில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் ஆங்கிலத்தில் கேளுங்கள் என எதிர்கேள்வி கேட்காமல் வாய்மூடி மௌனியாக சிதம்பரம் இருந்தது ஏன்? எதிர்கேள்வி கேட்டால் அதே இடத்திலேயே செருப்பு மூஞ்சிக்கு வரும். அடுத்த சில நாட்களில் பதவிக்கு ஆபத்துக்கூட வரக்கூடும்.

ஆனால், தமிழில் கேள்விகேட்கக்கூடாது எனக் கூறினால் செருப்பும் வராது, பருப்பும் வராது. சிதம்பரத்தின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு தமிழனிடம் ஒற்றுமையும் கிடையாது. இந்த சிதம்பர ரகசியத்தை அவர் ஏற்கெனவே அறிந்துவைத்திருப்பதால் தமிழை தலைகுனிய செய்துவிட்டார். இந்திய அரசில் உயர்பதவி வகிக்கும் ஒருவரே, ஒரு தமிழனே இப்படி செம்மொழி தமிழை அவமதிக்கலாமா? அல்லது அவமதிக்க தமிழக அரசியல்வாதிகள் விடலாமா?.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முதல் இடத்தில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியோ, அங்கேயுள்ள நிலையில் அன்றைய தினம் இருந்தவர்கள் வேற்றுமொழிக்காரர்கள். அவர்களுக்கு ஆங்கிலம், அதைவிட்டால் ஹிந்தி தான் தெரியும். ஆகவே, அந்த சூழல்நிலையில் அந்த கருத்தை சிதம்பரம் கூறியிருக்கிறார் என சிதம்பரத்துக்கு பல்லக்கு தூக்குகிறார்.

சிதம்பரம் தமிழில் பதில் கூறினால் என்ன குறைந்துவிடும். வாயில் இருக்கும் முத்து கீழே விழுந்துவிடுமா? அல்லது உயரத்தில் ஒரு அடி குறைந்துவிடுவாரா?. தமிழனாய் பிறந்து தமிழை தலைகுனியவைப்பது, பெற்ற தாயை பிள்ளேயே தலைகுனியவைப்பதற்கு சமம்.

ஐரோப்பிய நாடுகளில் பிறக்க வேண்டிய சிதம்பரம், தட்டுத்தடுமாறி தமிழகத்தில் தமிழனாய் பிறந்துவிட்டார். தடுமாற்றத்தால் தமிழனாய் பிறந்த சிதம்பரத்துக்கு இதெல்லாம் புரியுமா? என்பது கேள்விக்குறி தான். ஆனால், அவருக்கு புரியவைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.