தமிழனுக்கு பாடம் எடுத்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
Saturday, February 20, 2010
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவது மெத்தப்படித்த சில மேதாவி தமிழர்களின் வழக்கமான செயல். அதிலும் சில கோமாளிகள் தங்கிழிஷில் (தமிழ், ஆங்கிலம் கலந்து) பேசி தன்னையும் ஏமாற்றி, பிறரையும் ஏமாற்றுவது இயல்பு. கோவையில் ஒரு அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றது.
மத்திய அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் சார்பில் குளோனிங் மரக்கன்றுகள் வெளியிடும் நிகழ்ச்சி கோவை வனக்கல்லூரி வளாகத்தில் 18.2.2010-ல் நடைபெற்றது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர் ஜி.குமாரவேலு, சற்று சிரமப்பட்டு ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார். இதைப்பார்த்த ஜெய்ராம் ரமேஷ், குமாரவேலு தமிழில் பேசுங்கோ எனக்கு புரியம் என்றார்.
இருப்பினும் குமாரவேலு, தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்தார். குமாரவேலுவின் ஆங்கில பேச்சை ஜெய்ராம் ரமேஷால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், தமிழ் பேச்சை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. அமைச்சரின் தலைஅசைப்பு, முகபாவணையில் இருந்து இதை தெளிவாக அறிய முடிந்தது.
சிறப்புவிருந்தினருக்கும் புரியாமல், கூடியிருந்த தமிழ் விவசாயிகளுக்கும் புரியாமல் இதுபோல தங்கிழிஷில் பேசும் தமிழ் கோமாளிகளை என்ன செய்ய? என்ற நியாயமான கேள்விக்கணை கூடியிருந்த விவசாயிகளின் மனதில் இருந்து வெளிவந்ததை காண முடிந்தது.
Posted by
நெல்லை பொடியன்
at
2:29 AM
3
comments
Labels: அரசியல், தமிழர், தமிழ்நாடு, விழிப்புணர்வு
மலேசியாவின் ராஜபக்ஷ நஜீப் டன் ரசாக்
Thursday, February 11, 2010
மலேசிய பிரதமர்
வசந்தகுமார் கிருஷ்ணன்
கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்
மலேசிய நாட்டின் இந்து உரிமை நடவடிக்கை குழு (இன்ட்ராப்) தலைவரும், மலேசிய இந்தியன் குரல் அமைப்பின் ஆலோசகருமான வசந்தகுமார் கிருஷ்ணன் பங்கேற்றார்.
2 ஆண்டுகள் சிறையிலும் பின்னர் வீட்டுக்காவலிலும் இருந்த அவர், முதல்முறையாக வெளிநாட்டு பயணமாக கோவைக்கு வந்திருந்தார். சிறைவாசத்துக்குப்பின் தான் பங்கேற்கும் முதல் மாநாடு தமிழர் பாதுகாப்பு மாநாடு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
இனி அவரின் நேர்முகம்:
கேள்வி: இன்ட்ராப் இயக்கம் தோன்றியது ஏன்?
பதில்: மலேசிய நாட்டில் இந்து கோயில்கள் குறிப்பாக தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்ட வருகிறது. இதை தடுக்கவே இன்ட்ராப் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
கேள்வி: மலேசியாவில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது?
பதில்: தமிழர்களின் வளர்ச்சியை மலேசிய அம்னோ கூட்டணி அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியை தடுத்துவிடலாம் என எண்ணி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களுக்கு மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.
கேள்வி: தமிழை குறிவைத்து தடைபோடுதற்கான காரணம் என்ன?.
பதில்: தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவி்ட்டால், அரசியல் ரீதியாக தமிழர்கள் அதிகாரத்துக்கு வருதவதை தடுத்துவிடலாம் என சூழ்ச்சியுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.
கேள்வி: மலேசிய அரசியல் சாசனங்களில் தமிழர்கள் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: மலேசிய அரசியல் சாசன சட்டம் பிரிவு 8-ன்படி மலாய், சீனர், இந்தியர்கள் என அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பிரிவு 12-ன்படி கல்வியில் மூன்று மொழிகளுக்கும் (மலாய், சீனம், தமிழ்) சமஉரிமை
வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் மதிக்காமல் தமிழர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறது மலேசிய அரசு.
Posted by
நெல்லை பொடியன்
at
8:22 AM
1 comments
Labels: அரசியல், இன்ட்ராப், உலகத் தமிழ் பாதுகாப்பு மாநாடு, சிறப்பு, மலேசியா
இதுதாங்க 8-வது உலக அதிசயம்!!!

கவிதையை வெளியிட்ட புலவர் பட்டணம் பழநிச்சாமி
கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை இது. உலகம் முழுவதும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காக இதை வெளியிடுகிறேன்.
தமிழகம் உள்ள தமிழர்கள் எல்லாம் தமிழய்ப் படித்தல் அதிசயம்
தமிழகக் கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனய் அதிசயம்
தமிழக வழக்கு மன்றங் களிலே தமிழில் புழங்கல் அதிசயம்
தமிழில் பெயருடன் தலய்முன் எழுத்தும் தமிழ்க்கய் எழுத்தும் அதிசயம்
தமிழர் இருவர் சந்தித் தாலே தனித்தமிழ் பேசுதல் அதிசயம்
தமிழர் குழந்தய் பெற்றோர் கூப்பிடல் அம்மா அப்பா அதிசயம்
தமிழர் குழந்தய்ப் பெயர்கள் எல்லாம் தமிழில் சூட்டல் அதிசயம்
தமிழர் சிறப்பணி உருமால் கட்டல் தமிழ் நாட்டினிலே அதிசயம்
தமிழ்நில முல்லய் சாமய்கொள்ளு சமயல் காண்பது அதிசயம்
தமிழர் கும்மி பிம்பிலி ஆட்டம் தமிழகம் நடப்பது அதிசயம்
தமிழர் கும்பிடும் வணக்கம் வாழ்த்து தகுதியில் புழங்கல் அதிசயம்
தமிழே இன்னும் இருபது ஆண்டில் ஆட்சியில் இருந்தால் அதிசயம்
தமிழகம் அதிகம் படித்திட்ட பேர்கள் தங்குதல் இங்கே அதிசயம்
தமிழகச் செல்வர் அடிக்கடி வெளிநாடு தாவாமல் இருந்தால் அதிசயம்
தமிழகப் பொதுநலப் பிரச்சினய் ஒற்றுமய் தாங்கிப்பழகல் அதிசயம்
தமிழக உறவுகள் சச்சர வின்றி சமமாய் வாழ்தல் அதிசயம்
தமிழய்த் தாழ்த்தும் ஆங்கில வருடிகள் தமிழாய் தழய்த்தல் அதிசயம்
தமிழே மூச்சு என்போர் எல்லாம் மக்கள் தமிழ்ப் பள்ளி சேர்த்தல் அதிசயம்
தமிழில் தனித்துவம் கொண்டவர் செயலப் தகவில் ஆய்தல் அதிசயம்
தமிழ்ப் போராளி என்கிற பேரும் ழகரம் ஒலித்தல் அதிசயம்
தமிழுக்காக உயிர்கொடுத்தோரின் சமாதி வணக்கம் போதாது
தமிழர் என்போர் எழுச்சியும் கொண்டு முன்னோர் பெருமய் எண்ணுங்கள்
தமிழின் வீழ்ச்சி ஏற்படும் போதில் தமிழா வாழ்ந்து என்ன பயன்?
தமிழுணர்வில்லாத் தடிமாடுகளே தற்கொலய் செய்து தொலையுங்களேன்!
படைப்பை ஆக்கியோன்: அருள்நிதிப் புலவர் பட்டணம் பழநிச்சாமி
வளர்கோகுலம் இல்லம்,
கோவய்-25,
தமிழ்நாடு,
இந்தியா,
செல்போன்-9363266820
(குறிப்பு) இவரது படைப்புகள் தொடர்ந்து எனது வலைப்பதிவில் வெளியாகும்
Posted by
நெல்லை பொடியன்
at
1:48 AM
1 comments
Labels: அரசியல், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு, தமிழ், புலவர் பட்டணம் பழநிச்சாமி
இந்தியாவின் இரண்டு முகங்கள்
Friday, February 5, 2010
05.02.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்
உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான். அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.
எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.
அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான உலகளாவிய கண்காணிப்பு அறிக்கையை யுனெஸ்கோ அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அறிக்கையின்படி ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவப் பருவத்தினரில் 7.1 கோடி பேர் பள்ளிக்குச் செல்லாமலும் உள்ளனர். அத்துடன் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் படிப்பறிவில்லாத மக்களில் பாதிபேர் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், இந்த நூற்றாண்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் படிப்பறிவில்லாதோர் இருக்கின்றனர் என்ற கசப்பான உண்மையை யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. மக்களிடையே படிப்பறிவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் வேதனை தரும் விதத்தில், ஆமை வேகத்தில் இந்த நாடுகளில் நடப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அதைவிட கொடுமையான விஷயம்.
சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வி அறிவில் இந்தியா முன்னேறினாலும், இதுவரை அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை. இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 65 சதவீதம் தான். கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தாலும், அதற்கேற்ப மக்களிடம் கல்வி அறிவு அதிகரிக்கவில்லை என்பதைத் தான் யுனெஸ்கோவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் தான் இடைநிலைக் கல்வியில் (1 முதல் 8-ம் வகுப்பு வரை) சேர்கின்றனர். இதை 75 சதவீதமாக மாற்ற 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்குப்பின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
1950-ம் ஆண்டில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இப்போது பல்கலைக்கழங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கல்லூரிகளின் எண்ணிக்கை 500-ல் இருந்து 22 ஆயிரமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5.75 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் பட்டப்படிப்புக்குப்பின் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் பேர் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர். இது உலக சராசரியைவிட (23) மிகக் குறைவு. வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் 40 முதல் 80 சதவீதமாக உள்ளனர். வளரும் நாடுகளில் இந்த விகிதம் 35 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை 15 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, எழுத்தறிவு சதவீதமும், உயர்கல்வி பெறுவோரின் சதவீதமும் உயரவில்லை. கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
விண்வெளி ஆய்வில் உலகில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள். உலகின் முன்னணி நாடுகளில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் தான் என்பதை எண்ணும்போது புல்லரிக்கிறது.
அதேநேரத்தில் உலகிலேயே படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்ற தகவலைக் கேட்கும்போது வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. வளர்ந்த, வளமான, படிப்பறிவு மிகுந்த ஒளிரும் இந்தியா ஒரு புறம். ஏழ்மையான, படிப்பறிவு இல்லாத இருண்ட இந்தியா மறுபுறம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன? இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல், குறைவான கல்வி விழிப்புணர்வு ஆகியவை தான் முக்கிய காரணம். எனவே, ஊழலை ஒழிக்க வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் சபதம் ஏற்பது அவசியம்.
2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் தகவல்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும். கிராமங்களில் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தேசப்பிதா காந்தி கண்ட கனவுப்படி, கிராம ராஜ்ஜியம் அமைத்தால் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் அபரிமிதமான வளர்ச்சி அடையும்.
எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்தினால் தான் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும். அப்போது "இருண்ட இந்தியா' என்ற நிலை மாறி பிரகாசமாக ஒளிரும் ஒரே இந்தியாவாக மாற்ற முடியும். இருண்ட இந்தியாவிலிருந்து ஒளிரும் இந்தியாவுக்குச் செல்ல எழுத்தறிவு சதவீதத்தை உயர்த்த வேண்டும். ஒளிரும் ஒரே இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு இந்தியனும் சபதம் ஏற்க வேண்டும்.
நன்றி: தினமணி
Posted by
நெல்லை பொடியன்
at
1:59 AM
1 comments
Labels: அரசியல், இந்தியா, உயர்கல்வி, கல்வி, சமுதாயம், சிறப்பு, விழிப்புணர்வு
சிதம்பரத்துக்கு சொரணை இருக்கா?
Thursday, February 4, 2010
புதுதில்லியில் 02-02-2010-ல் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தமிழையும், தமிழனையும் அவமானப்படுத்தும் வகையி்ல பேசியுள்ளார். தமிழை, தமிழனை, சக தமிழனே அவமதித்திருப்பது வெட்கக்கேடான செயல்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்களே என்று நிருபர் ஒருவர் தமிழில் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் சிதம்பரம், தமிழில் கேள்வி கேட்கக் கூடாது. தமிழில் கேள்வி கேட்டால் இங்கே மற்றவர்களுக்கு புரியாது. ஆங்கிலத்தில் கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என இருமாப்புடன் பேசியுள்ளார்.
அதேநேரத்தில் ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தனது தனது செயலரின் உதவியுடன் பதில் அளித்தார்.
ஹிந்தியில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் ஆங்கிலத்தில் கேளுங்கள் என எதிர்கேள்வி கேட்காமல் வாய்மூடி மௌனியாக சிதம்பரம் இருந்தது ஏன்? எதிர்கேள்வி கேட்டால் அதே இடத்திலேயே செருப்பு மூஞ்சிக்கு வரும். அடுத்த சில நாட்களில் பதவிக்கு ஆபத்துக்கூட வரக்கூடும்.
ஆனால், தமிழில் கேள்விகேட்கக்கூடாது எனக் கூறினால் செருப்பும் வராது, பருப்பும் வராது. சிதம்பரத்தின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு தமிழனிடம் ஒற்றுமையும் கிடையாது. இந்த சிதம்பர ரகசியத்தை அவர் ஏற்கெனவே அறிந்துவைத்திருப்பதால் தமிழை தலைகுனிய செய்துவிட்டார். இந்திய அரசில் உயர்பதவி வகிக்கும் ஒருவரே, ஒரு தமிழனே இப்படி செம்மொழி தமிழை அவமதிக்கலாமா? அல்லது அவமதிக்க தமிழக அரசியல்வாதிகள் விடலாமா?.
சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய முதல் இடத்தில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியோ, அங்கேயுள்ள நிலையில் அன்றைய தினம் இருந்தவர்கள் வேற்றுமொழிக்காரர்கள். அவர்களுக்கு ஆங்கிலம், அதைவிட்டால் ஹிந்தி தான் தெரியும். ஆகவே, அந்த சூழல்நிலையில் அந்த கருத்தை சிதம்பரம் கூறியிருக்கிறார் என சிதம்பரத்துக்கு பல்லக்கு தூக்குகிறார்.
சிதம்பரம் தமிழில் பதில் கூறினால் என்ன குறைந்துவிடும். வாயில் இருக்கும் முத்து கீழே விழுந்துவிடுமா? அல்லது உயரத்தில் ஒரு அடி குறைந்துவிடுவாரா?. தமிழனாய் பிறந்து தமிழை தலைகுனியவைப்பது, பெற்ற தாயை பிள்ளேயே தலைகுனியவைப்பதற்கு சமம்.
ஐரோப்பிய நாடுகளில் பிறக்க வேண்டிய சிதம்பரம், தட்டுத்தடுமாறி தமிழகத்தில் தமிழனாய் பிறந்துவிட்டார். தடுமாற்றத்தால் தமிழனாய் பிறந்த சிதம்பரத்துக்கு இதெல்லாம் புரியுமா? என்பது கேள்விக்குறி தான். ஆனால், அவருக்கு புரியவைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
பி.டி. கத்தரியே போ...போ....
Friday, January 22, 2010

கத்தரி செடியெல்லாம் காய்களாய் காய்த்து தொங்கும், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்ற கவர்ச்சி வாசகங்களுடன் பாமர விவசாயிகளுக்கு மாயவலை விரித்து வருகிறது பி.டி. கத்தரிக்காயை (மரபணு மாற்ற கத்தரிக்காய்) அறிமுகம் செய்யும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம்.
சமீபகாலமாக புதிய வகை பூச்சி கள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக் காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளிக்கப்படுகின்றன. அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துகிறோம் என்ற சப்பைகட்டு வாதங்கள் வேறு.
இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்திருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி! அதாவது பல்வலி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!. இதற்கு ஜால்ரா போடுகின்றன இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள்.
இந்தியாவின் 5 வேளாண் பல்கலைக்கழகங்களில் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்பட) பி.டி. கத்தரி ஆய்வுப்பணிகள் முடிவுற்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைகளின் நாயகன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சர்ச்ச்சைகளின் நாயகன் ஜெய்ராம் ரமேஷுன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் தான் இக்குழுமம் இயங்கி வருகிறது.
தில்லி, கோல்கத்தா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுப்பின.
கத்தரியை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு. அதை விற்கும் செய்யும் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு. உண்ணும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு. ஆனால், பி.டி. கத்தரியை அறிமுகம் செய்தே தீருவோம் என அடம்பிடித்து வருகிறார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு வால்பிடிக்கின்றனர் மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், மாநில வேளாண் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்.
பி.டி. கத்தரிக்கு அமைச்சர்களே வால்பிடிப்பது ஏன்?. மத்தியில் பிரதான எதிர்கட்சியான பாஜகவும், மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல நடித்து மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதன் ரகசியம் என்ன?.
பி.டி. கத்தரியின் உரிமையாளரான மான்சான்டோ நிறுவனம் கொட்டும் பண மழை தான்.
இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரானி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எலிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரல் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார். செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற் படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.
அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேலையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.
சர்வதேச எதிர்ப்புகள்
சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று இ.ப. விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இங்லாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்ற விதைகளை எதிர்த்துள்ளன.
2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான். ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.
இத்தனை நாடுகளும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகள் பணத்துக்காக பல்லக்கு தூக்குவது வெட்கக்கேடான செயல். பணமழையில் நனைய வேண்டும் என ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்(அலைக்கற்றை), முத்திரைத்தாள் ஊழல், போபர்ஸ் ஊழல் என இன்னும் புதுப்புது ஊழல்கள்.
உணவை விஷமாக்கும் பி.டி. கத்தரியில் மட்டும் காசுபார்க்க வேண்டாம். தயவுசெய்து பி.டி. கத்தரிக்கு தடைபோடுங்கள் மாண்புமிகு அரசியல்கோமாளிகளே....
Posted by
நெல்லை பொடியன்
at
2:58 AM
5
comments
Labels: அரசியல், சுற்றுச்சூழல், பி.டி. கத்தரி
பெரியாரின் பேரனே இது நியாயமா?
Wednesday, January 20, 2010
எதிர்கட்சியினரே அமைதியாக இருந்தபோது கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருக்கும் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதியை அடிக்கடி சீண்டுவதும். பின்னர் அவரிடமே சரண்டர் ஆவதும் வழக்கம். மேளதாளம் வாசிப்பவர் என கலைஞரை விமர்சனம் செய்துவிட்டு, இளங்கோவன் பட்டபாடு படாதபாடு.
மக்களவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஈரோட்டில், அதுவும் பெரியார் பிறந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இளங்கோவன் கொஞ்ச நாளாக முகவரி இல்லாமல் இருந்து வந்தார். பத்திரிகைகளில் பரபரப்பு பேட்டியோ, நக்கல், நையாண்டி தனமான பேச்சோ இல்லை.
இளங்கோவன் எங்கே இருக்கிறார் என பத்திரிகையாளர்களே தேடிவந்த நிலையில், ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி சிறப்பாக செயல்படுகிறார். கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டியதில்லை. இன்னமும் அவரது செயல்கள் பாராட்டத்தக்கவகையில் உள்ளன என மகுடிவாசித்திருக்கிறார்.
இதே மகுடியை ஒரு மாதத்துக்கு முன்பு வாசித்திருந்தால் கூட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கணக்கடங்கா குழுக்களில் ஏதாவது ஒரு குழுவில் இடம் பெற்றிருக்கலாம். பாவம் காலம் கடந்த யோசனை தான்.
கொஞ்சம் பொறுத்திருங்கள் இளங்கோவன் அவர்களே!. உங்களை போல கலைஞரின் ஞாபகத்துக்கு வந்த அடிவருடிகள் மட்டும் தான் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இன்னமும் சிலர் கலைஞரின் ஞாபகத்துக்கு வரவாய்ப்பு உண்டு அல்லது வரவைக்கப்படவும் வாய்ப்புண்டு. அப்போதாவது உங்களது பெயரும் அக் குழுக்களில் இடம்பெற்றுவிடும்.
எதையும் தைரியமாக, ஆணித்தரமாக, பாமரனுக்கும் புரியம் மொழியில் எளிமையாக பேசி மக்களிடம் விழிப்புணர்வையும், புரட்சியையும் ஏற்படுத்தியவர் பெரியார். தாத்தாவின் பிறகுணங்கள் உங்களிடம் இல்லாவிட்டாலும், தைரியமான பேச்சு மட்டும் உங்களிடம் இருக்குது என பெரியாரின் பேரன்கள் (தமிழர்கள்) பெருமைபட்டது உண்டு.
மனதில்படும் எதையும் பளிச்சென்றுகூறி வந்த நீங்கள், கருணாநிதிக்கு அடிவருடியாக மாறியதன் ரகசியம் என்ன?. கலைஞரின் சிறப்பாக செயல்படுகிறார்? என திமுக தொண்டன் கூறலாம். அதற்குகூட காரணம் உண்டு. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் இல்லாமல் கூட திமுக வெற்றி பெற முடியும் என்ற அளவுக்கு தனது சொந்த கட்சியை பலப்படுத்திவிட்டார்.
திமுக தொண்டன் கூற வேண்டிய கூற்றை, பெரியாரின் பேரன் கூறலாமா?. காங்கிரஸ் தொண்டன் என்பதை சற்று மறந்துவிட்டு, நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா? பெரியார் பேரன் மகுடிவாசிக்கலாமா?.
சரி பெரியாரின் பேரனாக உங்களால் கருத்துதெரிவிக்க முடியாது. காரணம் ஊரறிந்த விஷயம். அதை நாங்களும் விட்டுவிடுகிறோம். காங்கிரஸ் தொண்டனாக கூறுங்கள். கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?.
10 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் சுமார் 12 ஆயிரம் துவக்கப்பள்ளிகளை துவக்கி கிராமங்களில் கல்வி்த் தீபத்தை ஏற்றினார். மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி பெல் தொழிற்சாலை, ஆவடி கனரக இயந்திரங்கள் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, சேலம் இருக்கு உருக்காலை, தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை என தமிழகத்தில் தொழில்புரட்சி செய்தார்.
பேச்சிப்பாறை, பெருஞ்சானி அணைகள், பாபநாசம் அணை, பவானிசாகர் அணை, இன்னமும் சில அணைகள் என தமிழகத்தின் நீர்வளத்தை பெருக்கினார். தனது தாய், சகோதரி, குடும்பம் என எதையும் பற்றி யோசிக்காமல், தமிழ்நாட்டுக்காகவும், இந்தியாவுக்காகவும் உழைத்தார்.
கலைஞரின் சாதனை என்ன?. மகன அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, இன்னொரு மகன் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, மகள் கனிமொழிக்கு மக்களவை உறுப்பினர் பதவி, பேரன் தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி, மற்றொரு பேரன் கலாநிதிமாறனுக்கு சன் டிவி குழுமம் (சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா டிவி, கே.டிவி, சன் மியூசிக், உதயா,.....), தனக்கு கலைஞர் டிவி.
வாக்கு வங்கி அரசியலுக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு. தமிழர்களை நிரந்தரமாக முன்னேற்ற, பொருளாதாரத்தை வலுப்படுத்த தொலைநோக்காக என்ன செய்தார் கலைஞர்?.
இளங்கோவன் அவர்களே எப்போதும் ஒரே மாதிரி பேசுங்கள். அடிக்கடி நிறம் மாறினால் வேறுபெயர் (பச்சோந்தி) கூறி அழைத்துவிடுவார்கள்
காங்கிரஸ் தொண்டனாக, காமராஜரின் விசுவாசியாக இப்போது கூறுங்கள் இளங்கோவன் அவர்களே!. கலைஞர் சிறப்பாக செயல்படுகிறாரா?. தப்பி, தடுமாறி பெரியாரின் குடும்பத்தில் பிறந்துவிட்டதால், பெரியாரின் பேரன் என்ற பெருமைமிகுந்த பெயரை காப்பாற்ற சற்று வீரமாக பேசுங்கள். இல்லை முதுகெலும்பு இல்லையென்றால் அமைதியாக இருங்கள்.
பெரியாரின் தோரணையில் சொல்வதென்றால்...ஈர வெங்காயம் இளங்கோவன் அவர்களே கொஞ்சநாள் வாயை பொத்திகிட்டு இருங்க......
கறுப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?
Thursday, January 14, 2010
தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என தமிழகத்தின் வீதியெங்கும் முழங்கி வந்த விஜயகாந்த், ஒத்தக் கருத்துடைய கட்சியுடன் கூட்டணிக்கு தயார் என அந்தர் பல்டி அடித்துவிட்டார். 21-ம் நூற்றாண்டில் பிற துறைகளில் ஏற்பட்டதுபோல அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (பணம் இருந்தால் அரசியல் செய்ய முடியும் என்பதை தாங்க இப்படி நாசுக்காக சொல்கிறோம்), கட்சி துவக்கிய 5 ஆண்டுகளில் கிடைத்த பழுத்த அனுபவங்கள் உள்ளிட்ட அடுக்கடுக்கான காரணங்களால் விஜயகாந்த் பல்டி அடித்திருக்கலாம்.
தமிழகத்தில் மாறிமாறி வரும் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்ற வீர வசனத்துடன், 2005ல் தே.மு.தி.க., வை துவக்கினார் விஜயகாந்த். கேப்டன் என தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற அடைமொழியை பயன்படுத்தி, கிராமங்களில் செழித்துவளர்ந்த எம்.ஜி.ஆர் வாக்குவங்கியை அறுவடை செய்தார் விஜயகாந்த்.
எட்டு மாத குழந்தை பருவத்திலேயே 2006-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலை கூட்டணியின்றி சந்தித்தது தேமுதிக கட்சி. பாமகவின் கோட்டையான விருத்தாச்சலம் தொகுதியில் (ராமதாஸின் தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள தொகுதி) துணிச்சலுடன் நின்று சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று பாமகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜயகாந்த். பிற தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர்களில் 99 சதவீதத்தினர் 3-வது இடத்தை பிடித்தனர்.
பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி தேமுதிக பெற்ற வாக்குகளால் மாறிப்போனது. தமிழக அரசியலில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை உருவானது. தமிழக அரசியல் கட்சிகளுக்கு வியப்பளிக்கும் வகையில் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே 8.38 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக.
திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரியகட்சி தேமுதிக தான் என ஜனநாயக ரீதியாக நிரூபித்தது அக் கட்சியின் வாக்குவங்கி. பொதுத்தேர்தல் முடிந்த ஆறு மாதங்களில், சபாநாயகர் பழனிவேல்ராஜன் மறைவால், மதுரை மத்தியத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வை விட 2,515 ஓட்டு மட்டுமே குறைவாக பெற்று மூன்றாவது இடத்தை தே.மு.தி.க., பிடித்தது. பொதுத்தேர்தலில் 8.38 சதவீதமாக இருந்த தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, இத் தேர்தலில் 19.13 சதவீதமாக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து, எட்டு மாத இடைவெளியில், மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தே.மு.தி.க., சந்தித்தது. இந்த தேர்தலில் 18 சதவீத ஓட்டுகளைப் பெற்று தனது பலத்தை வெளிப்படுத்தியது. இந்த இரு தேர்தல்களிலும், தே.மு.தி.க.,விற்கு மக்கள் வழங்கிய ஆதரவு, அ.தி.மு.க.,விற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தி.மு.க., வுக்கு மாற்று சக்தியாக தேமுதிக என மக்கள் அங்கீகரித்து விட்டனர் என்பதோடு, 2011ம் ஆண்டில் கேப்டன் ஆட்சி தான் என்ற முரசு கொட்டினர் தேமுதிக தொண்டர்கள்.
தேமுதிகவின் வாக்கு வங்கியை கண்டு புருவம் உயர்த்திய தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மக்களவைத் தேர்தலின்போது விஜயகாந்துடன் ரகசிய பேச்சு நடத்தின. 7 சீட், 600 கோடி ரூபாய் வேண்டும் என காங்கிரஸ் கட்சியுடன் பேரம் பேசியதாகவும், ஆனால், 5 சீட், ரூ.250 கோடி தருவதாக காங்கிரஸ் ஒத்துக்கொண்டதாகவும் தேமுதிக மீது விமர்சனம் எழுந்தது.
இருப்பினும் தனித்தே களம் இறங்கிய தேமுதிக, மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், அடுத்து வந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேமுதிகவுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றன.
தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. இதன் காரணமாக, ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தே.மு.தி.க., பக்கம் ஓரளவு சாய்ந்தது. தே.மு.தி.க.,வின் இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, சமீபத்திய இடைத்தேர்தலில் மாயமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு 17 ஆயிரத்து 57 ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், தற்போதைய இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 7,063 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதே போல், கடந்த மக்களவைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் 9,712 ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க., தற்போதைய இடைத் தேர்தலில் வெறும் 4,186 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. அதிமுக போட்டியிடாத இடைத் தேர்தல்கள் தவிர இடைத் தேர்தல்களில் எல்லாமே தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கூட இப்போது அந்தக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.
கரடு, முரடாண அரசியல் பாதையில் தனித்து செல்வது விஜயகாந்துக்கு பிடிக்கலாம். அவரது மனஉறுதி அப்படி. ஆனால், கட்சித் தொண்டர்கள் எத்தனைநாள்தான் கரடு, முரடாண பாதையில் அவருடன் பின்தொடர்ந்து வருவார்கள். எனவே, இதே பாதையில் பயணித்தால் அரசியலில் கரையேற முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் விஜயகாந்த்.
இத்தகைய நெருக்கடியான நிலையில் தான் கூட்டணிக்கு தயார் என திமுக, அதிமுகவின் பார்முலாவுக்கு மாறிவிட்டார் விஜயகாந்த். கரடு முரடாண பாதையில் இருந்து விலகி புதிய பாதையில் பயணம் செய்ய காத்திருக்கிறார் விஜயகாந்த். அந்த பாதை போயஸ் தோட்டம் (அதிமுக) வழியாக செல்கிறதா?, கோபாலபுரம் (திமுக) வழியாக செல்கிறதா? அல்லது சத்தியமூர்த்தி பவன் (காங்கிரஸ்) வழியாக செல்கிறதா? என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
போயஸ் தோட்டம் நோக்கி பயணித்து அம்மா பிள்ளையாக மாறிவிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர் விஜயகாந்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல்நோக்கர்கள். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது
கருப்பு எம்.ஜி.ஆரின் பாதை வெளிச்சமாகிவிடும்.
Posted by
நெல்லை பொடியன்
at
10:55 PM
4
comments
Labels: அரசியல், விஜயகாந்த்

