தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள்!

Monday, March 1, 2010

தினமணி கதிரில் 28.02.2010-ல் வெளியான எனது கட்டுரையின் முழு வடிவம்

மலேசியாவில் மக்கள்புரட்சியை ஏற்படுத்தி அரசு ​பதவியை கைப்பற்றிய முதல் தமிழர்.​ அந்நாட்டின் சுதந்திர வரலாற்றில் உயர்பதவிக்கு வந்த முதல் தமிழர் என்ற முத்திரையை பதித்தவர்.​ குடும்பம்,​​ அரசியல்,​​ பண பலம் உள்ளிட்ட எவ்வித பின்புலமும் இன்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அந்தப் புரட்சித் தமிழர்.​ விடுதலைப்புலிகளின் முதல்நிலை தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தவர்.​ மலேசிய தமிழர்களால் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பிரச்னைகளுக்காகவும் குரல்கொடுத்து வருபவர்.​ அவர் தான் ​ பேராசிரியர் முனைவர் பி.ராமசாமி.நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் குழுவுக்கு ஆலோசகராக இருக்கும் ராமசாமி,​​ இப்போது ​ மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார்.​ கோவையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்திருந்தார் ராமசாமி.​ கோவையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை பேட்டிக்காக அணுகினோம்.எளிமையான உடையில் சாதாரண மனிதனைப் போல காட்சி... அவரிடமோ விசாலமான பார்வை,​​ தொலைநோக்கு எண்ணம் பளிச்சிட்டது.​ இனி அவரிடம் பேசியதிலிருந்து..
கல்லூரி பேராசிரியராக இருந்த நீங்கள் அரசியலுக்கு வந்தது எப்படி?​​

அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற நான்,​​ மலேசிய தேசியக் கல்லூரியில் 1981 முதல் 2005 வரை விரிவுரையாளராக பணியாற்றினேன்.​ மலேசிய தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு செய்துதான் முனைவர் பட்டம் பெற்றேன்.​ இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 30 ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தி வந்தேன்.​ ஆனாலும்,​​ அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று துளியும் ஆசை இருந்ததில்லை.​ நேரு,​​ சுபாஷ் சந்திரபோஸ் பற்றி சிறுவயதிலேயே ஆர்வமாக படித்தேன்.​ மலேசிய அரசு தமிழர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்ததால் எதிர்கட்சியான ஜனநாயக செயல்கட்சியில் இணைய வேண்டிய காலகட்டம் வந்தது.