மலேசியாவின் ராஜபக்ஷ நஜீப் டன் ரசாக்

Thursday, February 11, 2010


மலேசிய பிரதமர்


வசந்தகுமார் கிருஷ்ணன்


கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில்
மலேசிய நாட்டின் இந்து உரிமை நடவடிக்கை குழு (இன்ட்ராப்) தலைவரும், மலேசிய இந்தியன் குரல் அமைப்பின் ஆலோசகருமான வசந்தகுமார் கிருஷ்ணன் பங்கேற்றார்.

2 ஆண்டுகள் சிறையிலும் பின்னர் வீட்டுக்காவலிலும் இருந்த அவர், முதல்முறையாக வெளிநாட்டு பயணமாக கோவைக்கு வந்திருந்தார். சிறைவாசத்துக்குப்பின் தான் பங்கேற்கும் முதல் மாநாடு தமிழர் பாதுகாப்பு மாநாடு என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இனி அவரின் நேர்முகம்:

கேள்வி: இன்ட்ராப் இயக்கம் தோன்றியது ஏன்?

பதில்: மலேசிய நாட்டில் இந்து கோயில்கள் குறிப்பாக தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்ட வருகிறது. இதை தடுக்கவே இன்ட்ராப் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

கேள்வி: மலேசியாவில் தமிழர்களின் நிலை எப்படி உள்ளது?

பதில்: தமிழர்களின் வளர்ச்சியை மலேசிய அம்னோ கூட்டணி அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டால் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சியை தடுத்துவிடலாம் என எண்ணி பள்ளிகளில் தமிழ்ப் பாடங்களுக்கு மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.

கேள்வி: தமிழை குறிவைத்து தடைபோடுதற்கான காரணம் என்ன?.
பதில்: தமிழின் முக்கியத்துவத்தை குறைத்துவி்ட்டால், அரசியல் ரீதியாக தமிழர்கள் அதிகாரத்துக்கு வருதவதை தடுத்துவிடலாம் என சூழ்ச்சியுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.

கேள்வி: மலேசிய அரசியல் சாசனங்களில் தமிழர்கள் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில்: மலேசிய அரசியல் சாசன சட்டம் பிரிவு 8-ன்படி மலாய், சீனர், இந்தியர்கள் என அனைவருக்கும் சமஉரிமை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பிரிவு 12-ன்படி கல்வியில் மூன்று மொழிகளுக்கும் (மலாய், சீனம், தமிழ்) சமஉரிமை
வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு சட்டப்பிரிவுகளையும் மதிக்காமல் தமிழர்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறது மலேசிய அரசு.

இதுதாங்க 8-வது உலக அதிசயம்!!!


கவிதையை வெளியிட்ட புலவர் பட்டணம் பழநிச்சாமி



கோவையில் பிப்.6,7-ம் தேதிகளில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கவிதை இது. உலகம் முழுவதும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்காக இதை வெளியிடுகிறேன்.


தமிழகம் உள்ள தமிழர்கள் எல்லாம் தமிழய்ப் படித்தல் அதிசயம்
தமிழகக் கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனய் அதிசயம்
தமிழக வழக்கு மன்றங் களிலே தமிழில் புழங்கல் அதிசயம்
தமிழில் பெயருடன் தலய்முன் எழுத்தும் தமிழ்க்கய் எழுத்தும் அதிசயம்

தமிழர் இருவர் சந்தித் தாலே தனித்தமிழ் பேசுதல் அதிசயம்
தமிழர் குழந்தய் பெற்றோர் கூப்பிடல் அம்மா அப்பா அதிசயம்
தமிழர் குழந்தய்ப் பெயர்கள் எல்லாம் தமிழில் சூட்டல் அதிசயம்
தமிழர் சிறப்பணி உருமால் கட்டல் தமிழ் நாட்டினிலே அதிசயம்

தமிழ்நில முல்லய் சாமய்கொள்ளு சமயல் காண்பது அதிசயம்
தமிழர் கும்மி பிம்பிலி ஆட்டம் தமிழகம் நடப்பது அதிசயம்
தமிழர் கும்பிடும் வணக்கம் வாழ்த்து தகுதியில் புழங்கல் அதிசயம்
தமிழே இன்னும் இருபது ஆண்டில் ஆட்சியில் இருந்தால் அதிசயம்

தமிழகம் அதிகம் படித்திட்ட பேர்கள் தங்குதல் இங்கே அதிசயம்
தமிழகச் செல்வர் அடிக்கடி வெளிநாடு தாவாமல் இருந்தால் அதிசயம்
தமிழகப் பொதுநலப் பிரச்சினய் ஒற்றுமய் தாங்கிப்பழகல் அதிசயம்
தமிழக உறவுகள் சச்சர வின்றி சமமாய் வாழ்தல் அதிசயம்

தமிழய்த் தாழ்த்தும் ஆங்கில வருடிகள் தமிழாய் தழய்த்தல் அதிசயம்
தமிழே மூச்சு என்போர் எல்லாம் மக்கள் தமிழ்ப் பள்ளி சேர்த்தல் அதிசயம்
தமிழில் தனித்துவம் கொண்டவர் செயலப் தகவில் ஆய்தல் அதிசயம்
தமிழ்ப் போராளி என்கிற பேரும் ழகரம் ஒலித்தல் அதிசயம்

தமிழுக்காக உயிர்கொடுத்தோரின் சமாதி வணக்கம் போதாது
தமிழர் என்போர் எழுச்சியும் கொண்டு முன்னோர் பெருமய் எண்ணுங்கள்
தமிழின் வீழ்ச்சி ஏற்படும் போதில் தமிழா வாழ்ந்து என்ன பயன்?
தமிழுணர்வில்லாத் தடிமாடுகளே தற்கொலய் செய்து தொலையுங்களேன்!


படைப்பை ஆக்கியோன்: அருள்நிதிப் புலவர் பட்டணம் பழநிச்சாமி
வளர்கோகுலம் இல்லம்,
கோவய்-25,
தமிழ்நாடு,
இந்தியா,
செல்போன்-9363266820


(குறிப்பு) இவரது படைப்புகள் தொடர்ந்து எனது வலைப்பதிவில் வெளியாகும்